கை வெட்டப்பட்ட தமிழக பெண்: சவுதியின் விளக்கத்தை ஏற்க மறுத்தது இந்தியா
டெல்லி: 55 வயது இந்திய பெண் தனது முதலாளியின் வீட்டில் இருந்து தப்பிக்கையில் கீழே விழுந்ததில் கையை இழந்துவிட்டார் என்று சவுதி கூறுவதை ஏற்க இந்தியா தயாராக இல்லை.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள மூங்கிலேறி கிராமத்தைச் சேர்ந்த கஸ்தூரி(55) சவுதி அரேபியாவில் ஒரு வீட்டில் வேலை செய்து வந்தார். அவரின் வலது கையை அவரது முதலாளி வெட்டியுள்ளார். இதனால் அவர் ரியாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது கையை முதலாளி வெட்டவில்லை என்றும், அவர் முதலாளியின் வீட்டில் இருந்து தப்பிக்கையில் கீழே விழுந்து கையை இழந்துவிட்டதாகவும் சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சவுதியின் இந்த விளக்கத்தை ஏற்க இந்தியா தயாராக இல்லை.
இந்த சம்பவம் குறித்து விரிவான அறிக்கை அளிக்குமாறு சவுதி அரேபியாவை இந்தியா கேட்டுள்ளது. கஸ்தூரியின் கை வெட்டப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அவரின் முதலாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
மேலும் கஸ்தூரியின் மருத்துவ செலவை அவரது முதலாளியே ஏற்க வேண்டும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்த அறிக்கைக்காக காத்திருப்பதாகவும், அறிக்கை கிடைத்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கஸ்தூரியின் மனநலம் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது என்று சவுதி கெசட் நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. கஸ்தூரி சம்பவம் நடப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு சவுதி வந்ததாகவும், முதலாளியின் வீட்டில் இருந்து தப்பி ஓடும்போது கீழே விழுந்தது கை துண்டாகிவிட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியர்களை சவுதி அரேபியாவுக்கு அனுப்பி வைக்கும் ஏஜெண்டுகளை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கண்காணித்து வருகிறது. பெரும்பாலான ஏஜெண்டுகள் உண்மையை மறைத்து இந்தியர்களை வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பி வைத்து விடுகிறார்கள்.