தீபாவளி கொண்டாட்டம்.. வாகா எல்லையில் இந்திய- பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இனிப்பு பரிமாற்றம்
அமிர்தசரஸ்: தீபாவளி பண்டிகையையொட்டி இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியான வாகா எல்லைக்கோடு அருகே இருநாட்டு வீரர்களும் இனிப்புகளை பரிமாறி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.
பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தானையொட்டி அமைந்துள்ள வாகா எல்லைப் பகுதியில் முக்கிய பண்டிகைகளின் போது இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் இனிப்புகளையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொள்வது வழக்கம்.
காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வந்ததால் கடந்த ஆண்டு தீபாவளித் திருநாளன்று எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களுக்கு இனிப்பு வழங்கவில்லை.
அதேபோல் இந்த ஆண்டும் கடந்த சில நாட்களுக்கு முன்பு எல்லைப் பகுதியில் இந்திய நிலைகளின் மீது அவ்வப்போது தாக்குதல்களும், தொடர் அத்துமீறல்களும் நடைபெற்றது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.
இதனால் இந்த ஆண்டும் தீபாவளிக்கு இனிப்புகள் வழங்கப்படுமா என்ற சந்தேகம் நிலவி வந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான வாகா எல்லைக் கோடு அருகே எல்லைப் பாதுகாப்புப் படை டிஐஜி டெபி ஜோசப், பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் விங் கமாண்டர் முகமது அசீர் கானுக்கு இந்திய பாரம்பரிய இனிப்புகளை வழங்கி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். அதனைத் தொடர்ந்து இந்திய பாதுகாப்பு படை வீரர்களும் இனிப்புகளை பரிமாறி பாகிஸ்தான் வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.