ராணுவ மருத்துவமனையில் ஹனுமந்தப்பாவை நேரில் சென்று பார்த்த ராணுவத் தளபதி தல்பீர் சிங்
டெல்லி: சியாச்சினில் உயிருடன் மீட்கப்பட்ட வீரர் ஹனுமந்தப்பாவை ராணுவத் தளபதி தல்பீர் சிங் நேரில் சென்று பார்த்தார்.
கடந்த 3ம் தேதி சியாச்சினில் மெட்ராஸ் படைப்பிரிவை சேர்ந்த 10 வீரர்கள் தங்கியிருந்த ராணுவச்சாவடி மீது பனிப்பாறை ஒன்று சரிந்து விழுந்து, அமுக்கியது. வீரர்களை மீட்க 200 வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
நவீன கருவிகள் மூலம் பனிப்பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டன. இந்நிலையில், மோப்பநாய் உதவியுடன் 6 நாட்களுக்குப் பின் ஹனுமந்தப்பா என்ற வீரர் உயிருடன் மீட்கப்பட்டார்.
மயங்கிய நிலையில் இருந்த ஹனுமந்தப்பா உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் லடாக்கிற்கும், பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் டெல்லிக்கும் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு செயற்கை சுவாசம் அளித்து தொடர் சிகிச்சை தரப்படுகிறது. கோமா நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தாலும், எப்படியாவது ஹனுமந்தப்பா உயிர் பிழைத்து விட வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி நாட்டுமக்களும் உருக்கமுடன் பிரார்த்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று ஹனுமந்தப்பாவை ராணுவ தளபதி தல்பீர் சிங் நேரில் சென்று பார்த்தார். டாக்டர்களிடம் அவருக்கு அளிக்கப்படுகிற சிகிச்சை பற்றியும் அவர் கேட்டறிந்தார்.
சிகிச்சைப் பெற்று வரும் ஹனுமந்தப்பா கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.