கடத்தப்பட்ட நேபாள ரிட்டர்ன் இந்தியர்களின் குழந்தைகள் மீட்பு
பாட்னா: நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து வேலை இழந்து இந்தியா திரும்பியவர்களின் குழந்தைகள் கடத்தப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு கடத்தப்பட்ட குழந்தைகளில் 20க்கும் மேற்பட்டோரை இந்திய அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதி நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் 8 ஆயிரத்து 600க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். லட்சக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்துள்ளது. ஏராளமானோர் வீடுகளை இழந்து தெருக்களில் டெண்டுகள் போட்டு வசித்து வருகிறார்கள்.
நிலநடுக்கத்தால் வேலை இழந்த இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர். அவ்வாறு நாடு திரும்பியவர்களின் குழந்தைகளை கடத்தும் அவலம் நடந்து வருகிறது. அதிலும் குறிப்பாக பீகார் மாநிலத்தில் நேபாளத்தில் இருந்து வந்துள்ளவர்களின் குழந்தைகள் கடத்தப்பட்டு வருவது அதிகாரிகளுக்கு தலைவலியாக உள்ளது. நேபாளத்தில் இருந்து வரும் வட இந்தியர்களை எல்லையில் சந்திக்கும் கடத்தல்காரர்கள் அவர்களின் மைனர் குழந்தைகளை தங்களுடன் அனுப்பி வைத்தால் அவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை அளிப்பதாக கூறி ஏமாற்றுகிறார்கள்.
கடந்த 20 நாட்களில் கடத்தப்பட்ட குழந்தைகளில் 26 பேரை மீட்டுள்ளதாக பீகாரின் கிழக்கு சம்பரன் மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த அரசு அதிகாரி தெரிவித்துள்ளார். கடத்தப்படும் குழந்தைகளை கூலித் தொழிலாளர்களாக ஆக்கி வருகிறார்கள். பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கார்மென்ட் நிறுவனத்தில் இருந்து 28 குழந்தை தொழிலாளர்களை என்ஜிஓ ஒன்று மீட்டுள்ளது. அதில் நேபாளத்தைச் சேர்ந்த 8 குழந்தைகளும் அடக்கம். அவர்கள் நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்படும் முன்பு இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.