இந்தியாவுக்கு உதவ மறுத்த ஈராக் அரசு.. கை கொடுத்த சதாமின் நண்பர்கள்!
டெல்லி: ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த இந்திய நர்ஸ்களையும், இதர இந்தியர்களையும் மீட்பதில் ஈராக் அரசும், ஈராக் ராணுவமும் இந்தியாவுக்கு ஒத்துழைப்பு தரவில்லை. இதையடு படு புத்திசாலித்தனமாக மறைந்த சதாம் உசேனின் பாத் கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர்களிடமும், தீவிரவாதிகளுக்கு நெருக்கமானவர்களிடமும் இந்திய அரசே நேரடியாக தொடர்பு கொண்டு பேசி காரியத்தைச் சாதித்து அசத்தியுள்ளது.
பலமுனைகளிலும் இதற்கான முயற்சிகளை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜும், பிரதமர் அலுவலகமும் மேற்கொண்ட விதம் அயரடிப்பதாக உள்ளது. இப்படிப்பட்ட முயற்சிகளை இந்திய அரசு இதுவரை மேற்கொண்டதாகத் தெரியவில்லை. அந்த அளவுக்கு பலவிதங்களிலும் தொடர்ந்து முயற்சி செய்து, இந்தியா மீது மதிப்பு வைத்துள்ள சதாம் உசேனின் கட்சியினர் மூலம் காரியத்தை சாதித்து அத்தனை பேரையும் பத்திரமாக மீட்டுள்ளது இந்தியா.
நர்ஸ்கள் உள்ளிட்டோரை மீட்பதில் சதாமின் பாத் கட்சியினர்தான் பெரும் பங்கு வகித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. பாத் கட்சியினர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு நெருக்கமானவர்கள். ஈராக் பிரதமர் நூர் அல் மாலிக்கி அரசுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடி வருபவர்களும் கூட. மேலும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்து செயல்பட்டு வரும் பல்வேறு சன்னி குழுக்களும் கூட இந்தியாவுக்காக உதவியுள்ளனவாம்.
என்ன நடந்தது.. மெளனம் காக்கும் இந்திய அரசு
அதேசமயம், நர்ஸ்கள் உள்ளிட்ட இந்தியர்களை மீட்க இந்தியா எப்படி செயல்பட்டது, என்ன செய்தது, என்ன நடந்தது என்பது குறித்து எந்த விவரத்தையும் மத்திய அரசு இதுவரை வெளிடவில்லை.
இன்னும் 39 பேர் சிக்கியிருப்பதால்
தீவிரவாதிகளின் பிடியில் இன்னும் 39 இந்தியர்கள் சிக்கியிருப்பதால் இதுகுறித்து மத்திய அரசு எதுவும் சொல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
பலமுனை முயற்சிகள்
ஆனால் இந்திய அரசு வரலாறு காணாத வகையில் பலமுனைகளிலும் இதற்கான முயற்சிகளையும், பேச்சுக்களையும் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
பாத் கட்சியினர்
ஈராக் அரசும், ராணுவமும் இந்தியாவுக்கு உதவ முடியாத நிலையில் இருப்பதாக கூறியதைத் தொடர்ந்து முதலில் இந்தியா எடுத்த முடிவு - சதாம் உசேனின் பாத் கட்சியைப் பிடித்ததுதான்.
இந்தியாவின் நண்பர்களான சதாம் ஆதரவாளர்கள்
பாத் கட்சியினர் இந்தியா மீது மதிப்பு வைத்திருப்பவர்கள். காரணம், சதாமின் நண்பராக இந்தியா இருந்ததால். அவர்களுடன் இந்திய அரசு பேசி உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்.
சன்னி குழுக்களுடன் பேச்சு
அதேபோல ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்து செயல்பட்டு வரும் பல்வேறு சன்னி குழுக்களையும் இந்தியா தொடர்பு கொண்டு உதவி கோரியுள்ளது.
சதாம் செல்வாக்கு உள்ள ஊர்களைச் சேர்ந்த
மேலும் சதாம் உசேனின் செல்வாக்கு கொடி கட்டிப் பறந்த பகுதிகளா பலூஜா, ரமாதி, அன்பர் பகுதிகளில் செயல்பட்டு வரும் சன்னி குழுக்களையும் இந்தியா தொடர்பு கொண்டதாக தெரிகிறது. இவர்கள் அல் கொய்தாவுக்கு எதிரானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சதாமின் நெருங்கிய நண்பர்
மேலும் சதாம் உசேனின் முன்னாள் நெருங்கிய நண்பரும், தற்போது நக்ஷாபந்தி ஆர்மி என்ற அமைப்பை நடத்தி வருபவருமான இஸ்ஸாத் இப்ராகிம் அல் தூரியையும் இந்தியா தொடர்பு கொண்டு உதவி கோரியுள்ளது.
சவூதி - கத்தார் உதவவில்லை
மறுபக்கம் பல்வேறு நாடுகளையும் கூட இந்தியா அணுகியது. ஆனால் சவூதி அரேபியா, கத்தார் போன்ற நாடுகள் உதவிக்கு வரவில்லை.
இருந்தாலும் விடாத மத்திய அரசு, பல அமைப்புகள், பல தனி நபர்களுடன் இடைவிடாமல் பேசி நல்லபடியாக அனைவரையும் மீட்டு சாதித்துள்ளது.