ஐஎஸ் அமைப்புக்கு எதிராக இந்திய இமாம்கள் பத்வா: மோடியின் திட்டம் 'சக்சஸ்'
டெல்லி: மிதவாத முஸ்லீம்களை ஊக்குவிப்பது என்ற மத்திய அரசின் முடிவுக்கு பலன் கிடைக்கத் துவங்கியுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக இந்தியாவைச் சேர்ந்த சுமார் 1000 இமாம்கள் பத்வா விட்டுள்ளது பெரிய விஷயம் ஆகும்.
இந்தியாவைச் சேர்ந்த சுமார் ஆயிரம் இமாம்கள், முப்திகள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு எதிராக பத்வா விட்டுள்ளனர். அப்பாவி மக்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கொலை செய்வதற்கு பத்வாவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கொள்கைள் இஸ்லாத்திற்கு எதிரானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பத்வாவின் நகல் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்கா உள்பட 47 நாடுகளுக்கும் நகல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தான் செய்யும் அட்டகாசங்கள் அனைத்தும் ஷரியா சட்டம் என்று கூறி இஸ்லாத்தின் பெயரை கெடுத்து வருகிறது. இந்நிலையில் தான் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு கூறுவது போன்று மக்களை கொல்வதும், காயப்படுத்துவதும் ஷரியா சட்டம் அல்ல என்று பத்வாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இமாம்கள் வெளியிட்டுள்ள இந்த பத்வா இந்திய அரசுக்கு வரமாக அமைந்துள்ளது.
ஆயிரம் பேர் விடுத்துள்ள பத்வாவால் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேரத் துடிக்கும் இந்திய இளைஞர்கள் இனி யோசிப்பார்கள். அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் பரெல்வி சுபி அறிஞர்கள் 40 பேரை சந்தித்து பேசினர். மிதவாத இஸ்லாத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த சந்திப்பு நடந்தது.
அந்த சந்திப்பின்போது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் அட்டகாசம் பற்றி பேசப்பட்டது. தீவிரவாதத்தால் சுபி கொள்கைகள் பலவீனமாக்கப்படுவதாக மோடி தெரிவித்தார். அத்தகைய தீவிரவாத சக்திகளுக்கு எதிராக சுபி அறிஞர்கள் சமூக வலைதளங்களில் குரல் கொடுக்க வேண்டும் என மோடி கேட்டுக் கொண்டார். அவ்வாறு செய்வதன் மூலம் இந்தியாவில் தீவிரவாதம் வேரூன்றாமல் இருக்கும் என்றார் மோடி.