பாக். நாடாளுமன்றத்தில் துருக்கி அதிபர் சர்ச்சை பேச்சு.. கொதித்து போன இந்தியா.. மீண்டும் கடும் தாக்கு
புதுடில்லி: காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தானுக்கு ஆதரவளித்ததற்காக துருக்கி அதிபர் ரெசெப் எர்டோகனை மூன்று நாட்களில் இரண்டாவது முறையாக இந்தியா தாக்கியுள்ளது.
ஏனெனில் அவர் இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிடுவது மட்டுமல்லாமல் எல்லை தாண்டி தீவிரவாத செயல்களை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு ஆதரவை வழங்கி நியாயப்படுத்துவதாகவும் இந்தியா குற்றம் சாட்டி உள்ளது.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் துருக்கி அதிபர் எர்டோகன் மூன்று நாட்களுக்கு முன்பு பேசுகையில், ''முதல் உலகப் போரில் துருக்கி மக்கள் வெளிநாட்டினரை எதிர்த்தது போல், காஷ்மீர் மக்கள் தங்கள் துன்பத்திற்கு எதிராகப் போராடி வருகிறார்க்ள். காஷ்மீர் பிரச்சனை பாகிஸ்தான், துருக்கி ஆகிய இரு நாடுகளுக்கு நெருக்கமானது "என்றார்.
ஒருங்கிணைந்த பகுதி
எர்டோகனின் இந்த பேச்சால் கடும் கோபம் அடைந்த இந்தியா அவரை கடந்த மூன்று நாட்களில் இரண்டாவது முறையாக தாக்கி உள்ளது. பேசிய அன்றே எதிவினை ஆற்றிய இந்தியா, "இந்தியாவுடன் ஒருங்கிணைந்த பகுதியா காஷ்மீர் பற்றிய அனைத்துக் கருத்துகளையும் இந்தியா நிராகரிக்கிறது. துருக்கி அதிபர் இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிட வேண்டாம் .
பயங்கரவாத அச்சுறுத்தல்
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கும், பிராந்தியத்திற்கும் ஏற்படும் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் மற்றும் உண்மை நிலைகளை துருக்கி புரிந்துகொள்ள வேண்டும் என்று துருக்கிக்கு அழைப்பு விடுக்கிறோம்" என அன்றே கூறியது.
உறவுகளில் தாக்கம்
இந்நிலையில் சீனாவை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு துருக்கி ஆதரவு அளித்திருப்பதை இந்தியா சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. துருக்கியின் இந்தியாவுக்கான தூதர் சகீர் டோருன்லரை நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்த இந்தியா, துருக்கியின் நடவடிக்கைகள் இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளுக்கு கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று எச்சரித்தது.
சிதைக்கிறது
வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார் கூறுகையில், "துருக்கி அதிபரின் கருத்துக்கள் வரலாற்றைப் பற்றிய புரிதலையோ அல்லது இராஜதந்திரத்தின் நடத்தையையோ பிரதிபலிக்கவில்லை. நிகழ்காலத்தைப் பற்றிய குறுகிய எண்ணம் கொண்ட பார்வையை முன்னேற்றுவதற்காக அவை கடந்த கால நிகழ்வுகளை சிதைக்கின்றன என்றார்.
அப்பட்டமான தீவிரவாதம்
இந்தியாவின் ஒருதலைப்பட்ச நடவடிக்கையால் காஷ்மீரிகள் பாதிக்கப்படுவதாக அ எர்டோகன் கூறிய கருத்துக்கள், மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் துருக்கி தலையிடுவதற்கான ஒரு எடுத்துக்காட்டு என்றும் ரவீஸ் குமார் கூறினார். "எர்டோகனின் கருத்துக்களை இந்தியா முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கருதுகிறது. பாகிஸ்தானால் இவ்வளவு அப்பட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்ட எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நியாயப்படுத்த துருக்கி மீண்டும் மீண்டும் மேற்கொண்ட முயற்சிகளை நாங்கள் நிராகரிக்கிறோம்" என்றார் ரவீஷ் குமார்,