43 ஆண்டுகளுக்கு முன் ஜனநாயகத்தை புதைகுழிக்கு அனுப்பிய இந்திராவின் 'எமெர்ஜென்சி' நாட்கள்
இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு நாட்களாக இருக்கின்றன இந்திராவின் எமர்ஜென்சி நாட்கள்.
Recommended Video
டெல்லி: இந்தியாவின் ஆகப் பெரும் அடையாளமாகவும் போற்றுதலுக்குரியதாகவும் திகழ்ந்த ஜனநாயகத்தை புதைகுழிக்கு அனுப்பி அவசரநிலை பிரகடனம் எனும் எமர்ஜென்சியை பிரதமராக இருந்த இந்திரா காந்தி அரசு 43 ஆண்டுகளுக்கு முன்பு 1975 ஆம் ஆண்டு ஜூன் நள்ளிரவில் பிரகடனம் செய்தது. இந்திய வரலாற்றின் கறுப்பு நாட்களாக அவசர நிலை பிரகடனம் 21 மாதங்கள் அமலில் இருந்தன.
1975-ம் ஆண்டு ஜூன் 25-ந் தேதி நள்ளிரவில் அவசரநிலை பிரகடனத்தை அப்போதைய ஜனாதிபதி பக்ருதீன் அலி முகமது வெளியிட்டார். நாட்டின் கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், ஊடக சுதந்திரம் அத்தனையும் பறிபோயின.
எதிர்க்கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் என பல லட்சம் பேரை தேடித் தேடி சிறையில் அடைத்தது. கட்டாய குடும்பக் கட்டுப்பாட்டு திட்டம் அமல்படுத்தப்பட்டது. தேசத்தின் அறிவிக்கப்படாத நிழல் பிரதமராக இந்திராவின் மகன் சஞ்சய்காந்தி வலம் வந்தார்.
எமர்ஜென்சி ஏன்?
1971-ம் ஆண்டு ரேபரேலி லோக்சபா தேர்தலில் இந்திரா காந்தி வென்றதை எதிர்த்து சோசலிஷ்ட் கட்சி தலைவர் ராஜ்நாராயணன் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் 1975-ம் ஆண்டு ஜூன் 12-ந் தேதி இந்திராவின் தேர்தல் வெற்றி செல்லாது என அதிரடி தீர்ப்பளித்தார். இதனால் இந்திரா காந்தி பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. ஆனால் அன்றைய மூத்த காங்கிரஸ் தலைவர்களின் ஆலோசனையின்படி 1975-ம் ஆண்டு ஜூன் 25 நள்ளிரவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. 1975-ம் ஆண்டு ஜூன் 26 அதிகாலை முதல் இது நடைமுறைக்கு வந்தது. மொத்தம் 21 மாதங்கள் அவசரநிலை பிரகடனம் அமலில் இருந்தது.
எமர்ஜென்சிக்கு எதிர்ப்பு
இந்திராவின் இந்த அவசரநிலைப் பிரகடனத்தை நாடு முழுவதும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மிகக் கடுமையாக எதிர்த்தனர். ஜெயப்பிரகாஷ் நாராயணன், காமராஜர், ஜார்ஜ் பெர்னாண்டஸ், வாஜ்பாய், அத்வானி, கருணாநிதி என நாட்டின் அத்தனை தலைவர்களும் அவசர நிலை பிரகடனத்தை எதிர்த்தனர். இதனால் எதிர்க்கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தமிழகமே எதிர்த்தது
தமிழகத்தில் அப்போது திமுக ஆட்சி நடைபெற்றது. ஆனாலும் அவசரநிலை பிரகடனத்தை திமுக மிகக் கடுமையாக எதிர்த்தது. ஊடகங்கள் மீதான ஒடுக்குமுறை உச்சத்தில் இருந்தது. எமர்ஜென்சியை காமராஜர் மிகக் கடுமையாக விமர்சித்தார்.
திமுக ஆட்சியை டிஸ்மிஸ் செய்த இந்திரா
திமுக மீது கடும் கோபத்தில் இருந்த இந்திரா காந்தி 1976 ஜனவரி 31-ல் ஆட்சியைக் கலைத்தார். இதையடுத்து திமுகவின் மூத்த தலைவர்கள் முரசொலி மாறன், வைகோ, துரைமுருகன், ஆர்க்காடு வீராசாமி மற்றும் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் சிறையில் அடைக்கப்பட்டு தாக்கப்பட்டனர். ஸ்டாலினைக் காப்பாற்ற அடிகளைத் தாங்கிய சென்னையின் முன்னாள் மேயர் சிட்டிபாபு மரணித்துப் போனார். ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்ற தொழிற்சங்க தலைவர்களுக்கு தமிழகம் அடைக்கலம் கொடுத்தது.
நடிகை சினேகலதா ரெட்டி
பெங்களூரு சிறையில் திரைப்பட நடிகை சினேகலதா ரெட்டி மிகக் கொடூரமாக தாக்கப்பட்டார். பரோலில் வெளியேவந்த நிலையில் சிறைக் கொடுமைகளால் மரணமடைந்து போனார்.
இப்படி எண்ணற்ற துயரம் தோய்ந்த நாட்களைக் கொண்டதாகத்தான் அவசர நிலை பிரகடனம் இருந்தது. 1977ஆம் ஆண்டு மார்ச் 21-ந் தேதி அவசரநிலை பிரகடனம் முடிவுக்கு வந்தது. இதற்கு பிந்தைய லோக்சபா தேர்தலில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது.