இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட அதிநவீன தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட்- 15
பெங்களூர்: தொலைத்தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட் 15 தென்னமெரிக்காவில் உள்ள பிரெஞ்ச் கயானாவில் இருந்து இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இந்தியாவின் அதிநவீன தொலைத்தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட் 15 தென் அமெரிக்காவில் உள்ள பிரெஞ்ச் கயானாவில் இருந்து இன்று அதிகாலை 3.04 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. செயற்கைக்கோள் ஏரியன் 5 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதை இன்று காலை 5.33 மணிக்கு இஸ்ரோ ட்விட்டர் மூலம் அறிவித்தது. 3 ஆயிரத்து 164 கிலோ எடை உள்ள செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 12 ஆண்டுகள் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
11 மணிநேரம் 30 நிமிட கவுன்ட் டவுனிற்கு பிறகு செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் ஏவப்பட்ட பிறகு 43 நிமிடங்கள் 24 நொடிகளில் செயற்கைக்கோள் ராக்கெட்டில் இருந்து பிரிந்து சென்றது.
அதன் பிறகு கர்நாடக மாநிலம் ஹாஸனில் உள்ள இஸ்ரோ நிறுவன கட்டுப்பாட்டு அமைப்பு செயற்கைக்கோளின் கட்டுப்பாட்டை பெற்றது. ஜிசாட் 17 மற்றும் ஜிசாட் 18 செயற்கைக்கோள்களும் ஏரியன் ராக்கெட்டுகள் மூலம் பிரெஞ்ச் கயானாவில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளன.
தலா 3 ஆயிரத்து 40 கிலோ எடை கொண்ட அந்த செயற்கைக்கோள்கள் 2016 மற்றும் 2017ம் ஆண்டில் விண்ணில் ஏவப்படும்.