சத்தமே இல்லாமல் இந்தியாவும், சீனாவும் இந்த "யுத்தம்" பற்றி ஏதாவது தெரியுமா உங்களுக்கு?
இந்தியாவும் சீனாவும் தெற்காசியாவில் எரிசக்தி யுத்தத்தை நடத்தி வருகிறது.
டெல்லி: தெற்காசியாவில் சப்தமே இல்லாமல் இந்தியாவும் சீனாவும் எரிசக்தியை முன்வைத்து மிகப் பெரும் யுத்தமே நடத்தி வருகிறது.
பூடானின் டோக்லாம் பீடபூமியை சீனா உரிமை கொண்டாடி வருகிறது. ஆனால் பூடானும் இந்தியாவும் சீனாவை கடுமையாக எதிர்த்து வருகின்றன.
பூடானுக்கு பக்கபலமாக இந்தியா இருப்பதால் சீனா கடும் அதிருப்தி அடைந்துள்ளது. சீனா எல்லையில் முன்னேறுவதைத் தடுக்க நமது ராணுவம் குவிக்கப்பட்டு வருகிறது.
முத்துமாலை திட்டம்
இந்தியாவும் சீனாவும் நீண்டகாலமாக தெற்காசிய நாடுகளில் ஆதிக்கம் செலுத்துவதில் பெரும் முனைப்பு காட்டுவது தொடர் நிகழ்வாக இருந்து வருகிறது. சீனாவோ முத்துமாலை திட்டத்தை முன்வைத்து தெற்காசிய நாடுகளில் துறைமுகங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
எரிசக்தி பதிலடி
இதேபோல் இந்தியாவும் தெற்காசிய நாடுகளில் எரிசக்தி மூலமாக சீனாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் மிக நெருக்கமான நட்பு நாடு மொரிஷியஸ். இந்த நாட்டில் மிகப் பெரிய பெட்ரோலிய சேமிப்பு கிடங்கு கட்டுமான பணியை இந்தியா மேற்கொண்டு வருகிறது. அத்துடன் மங்களூருவில் இருந்து ஏற்கனவே பெட்ரோலிய பொருட்கள் மொரிஷியஸுக்கு அனுப்பப்பட்டும் வருகிறது.
இந்தோனேசியா
அதேபோல் ஹைட்ரோகார்பன் வளம் உள்ள இந்தோனேசியாவில் மிதக்கும் எரிவாயு சேமிப்பு கிடங்குகளை அமைப்பது தொடர்பாக இந்தியா முனைப்பு காட்டுகிறது. மியான்மரைப் பொறுத்தவரையில் சீனாவின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது. இருப்பினும் இந்தியாவும் அஸ்ஸாமில் இருந்து டீசல் விநியோகம் செய்து வருகிறது. அதேபோல் மியான்மரில் எரிவாயு சேமிப்பு கிடங்கு அமைப்பது தொடர்பாகவும் இந்தியா தீவிர முனைப்பு காட்டுகிறது.
இலங்கை
இலங்கையின் திருகோணமலை துறைமுகத்தில் ஆங்கிலேயர் காலத்திய பெட்ரோலிய சேமிப்பு கிடங்குகளை இந்தியா பயன்படுத்தி வருகிறது. வங்கதேசத்துக்கும் டீசல் விநியோகம் செய்வதுடன் மின் உற்பத்தி திட்டங்களிலும் இந்தியா தீவிரமாக உள்ளது. வங்கதேசத்தில் அமைக்கும் மின் திட்டங்கள் மூலம் வடகிழக்கு மாநிலங்களுக்கு மின் விநியோகம் எளிதாகும் என்பது இந்தியாவின் நம்பிக்கை.
நேபாளம், பூடான்
நேபாளத்தைப் பொறுத்தவரையில் தடையில்லா மின்சாரம் கிடைப்பதற்கு காரணமே இந்தியாதான். அதேபோல் பூடானில் மிகப் பெரிய நீர்மின்திட்டங்களை இந்தியா செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் அனைத்தும் நிறைவடைந்ததும் இந்தியாவே இந்த மின்சாரத்தை வாங்கிக் கொள்ளும். அப்படி மின்சாரத்தை பூட்டான் ஏற்றுமதி செய்ய தொடங்கினால் மின் உற்பத்தி ஏற்றுமதியில் முக்கிய நாடாக பூடான் உருவெடுக்கும்.
எரிசக்தி யுத்தம்
தெற்காசிய நாடுகளின் துறைமுகங்களை சீனா மேம்படுத்த அந்த நாடுகளின் எரிசக்தி துறையை தம் வசமாக்கி வருகிறது இந்தியா. தெற்காசியாவில் சப்தமே இல்லாமல் எரிசக்தி யுத்தம் ஒன்றையும் இந்தியாவும் சீனாவும் நடத்தி வருகின்றன என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.