ஆபத்து காலங்களில் நாட்டை காப்பாற்றிய விமானம் தாங்கி போர்க்கப்பல்.. ஐஎன்எஸ் விராட் விடை பெறுகிறது!
இந்திய கப்பற்படையில் பணியாற்றி வந்த உலகின் பழைமையான விமானம் தாங்கிக் கப்பலான ஐ.என்.எஸ் விராட் இன்று பணியிலிருந்து ஒய்வு பெறுகிறது.
மும்பை: உலகின் பழமையான விமானம் தாங்கிக் கப்பலான ஐ.என்.எஸ். விராட் தனது 60 ஆண்டு கால பணியை முடித்துக் கொண்டு திங்கள்கிழமையுடன் ஓய்வு பெற்றது.
கடந்த 1943-ஆம் ஆண்டு இரண்டாவது உலகப் போரின்போது இந்த கப்பல் கட்டப்பட்டது. பின்னர் இங்கிலாந்து நாட்டு கடற்படையில் பயன்படுத்தப்பட்ட இந்த கப்பல், உலகின் மிகச் சிறந்த விமானம் தாங்கி கப்பல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
23 ஆயிரத்து 900 டன் எடை கொண்ட இந்த கப்பல் 226.5 மீட்டர் நீளமும், 49 மீட்டர் அகலமும் கொண்டது. இந்த கப்பலில் இருந்து ஒரே நேரத்தில் 18 விமானங்கள் செலுத்த முடியும்.
வயதான மூதாட்டி
கடற்படையில் வயதான மூதாட்டி என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட இந்த விராட் கப்பலை 1986-ஆம் ஆண்டு இங்கிலாந்திடம் இருந்து இந்தியா வாங்கியது. கடந்த 27 ஆண்டுகளாக இந்த கப்பல் இந்திய கடற்படையின் பெரும்பலமாக இருந்தது. பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் இடங்களில் நம் நாட்டுக்கு பாதுகாப்பு அரணாக இருந்தது.
சாதனை என்னென்ன?
இந்தியாவை சுனாமி தாக்கியபோதும், இந்திய பாராளுமன்றம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின்போது தப்பியோடிய தீவிரவாதிகளை கண்காணிப்பதிலும் விராட் கப்பல் ஆற்றிய சேவையை எளிதில் மறந்து விட முடியாது. இத்தனை சிறப்புகளை உடைய இந்த பழைமையான கப்பலானது இன்று கடற்படை பணியில் இருந்து விடை பெறுகிறது.
பிரிவு உபசார விழா
இதற்கான பிரிவு உபசார விழா மும்பையில் உள்ள கடற்படைதளத்தில் இன்று மாலை 5.45 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், இந்திய கடற்படை தலைமை தளபதி எஸ்.லம்பா உள்ளிட்ட கடற்படை அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
விமானங்கள்...
இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர்க் கப்பலான விராட்டில் சீ ஹாரியர்ஸ், ஒயிட் டைகர்ஸ், சீக்கிங் 42 பி, சீக்கிங் 42 சி மற்றும் சேடக் ஹெலிகாப்டர்கள் ஆகிய போர் விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. இந்தக் கப்பலானது கிட்டத்தட்ட 2,250 நாள்கள் ,அதாவது 6 ஆண்டுகள் கடலிலேயே இருந்தது. மேலும் 5,88, 288 கடல் மைல் தூரம் பயணித்துள்ளது.
கப்பலின் எதிர்காலம் என்ன?
இந்தக் கப்பலை அருங்காட்சியகத்தில் வைப்பதா அல்லது ஹோட்டலில் வைப்பதா அல்லது கடல் வழி வரலாற்றில் நினைவுச் சின்னமாக வைப்பதா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இத்தனை பெருமைகள் வாய்ந்த இந்தக் கப்பலை யாரும் வாங்கவில்லை எனில் 4 மாதங்கள் கழித்து அதை டிஸ்மாண்டில் (உடைப்பது) செய்வதைத் தவிர வேறு வழி இல்லை. உலகின் பழமையான இந்தக் கப்பலை வாங்குவதற்கு ஆந்திர மாநிலம் ஆர்வம் காட்டி வருகிறது குறிப்பிடத்தக்கது.