ஜிசாட் 17 செயற்கைகோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்...ஒரே ஆண்டில் 3 சாதனை நிகழ்த்திய இஸ்ரோ!
இஸ்ரோவின் ஜிசாட் 17 செயற்கைகோள் வெற்றிகரமாக ஏவப்பட்டு விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. தொலைதொடர்பு வசதிகளை மேம்படுத்தும் விதமாக ஜிசாட் 17 செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
பெங்களூரு : தொலைதொடர்பு மேம்பாட்டு செயற்கைக்கோளான ஜிசாட் 17 செயற்கைகோள் தெற்கு அமெரிக்காவின் வடகிழக்கு கடலோரப் பகுதியில் அமைந்துள்ள பிரெஞ்ச் கயானா ஏவுதளத்தில் இருந்து ஏரியான் 5 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
அதிகாலை 2.29 மணியளவில் ஏவப்பட்ட இந்த ராக்கெட்டில் இருந்து சரியாக 41வது நிமிடத்தில் செயற்கைகோள் பிரிந்து சென்று விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது. 3 ஆயிரத்து 477 கிலோ எடைகொண்ட ஜிசாட் செயற்கைகோள் மிக அதிக எடை கொண்டது. அதிக எடை கொண்ட செயற்கைகோளை ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தும் தொழில்நுட்ப அமைப்பு இஸ்ரோவிடம் இல்லை. இதன் காரணமாகவே பிரஞ்ச் கயானாவில் இருந்து இது விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் மட்டும் இஸ்ரோ மூன்று செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. ஜிஎஸ்எல்வி MKIII மற்றும் பிஎஸ்எல்விசி 38 என இரண்டு செயற்கைகோள்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது.
ஏரியன்ஸ்பேன் வெற்றிகரமாக ஜிசாட் 17 செயற்கைகோளை விண்ணில் செலுத்தியதற்காக விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் டாக்டர். சிவன் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் நாட்டிற்கு இந்த செயற்கைகோளின் பங்கு மிக அவசியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு செயற்கைக் கோள்களின் ஆயுட்காலமான 15 ஆண்டு அயுட்காலம் கொண்ட ஜிசாட் 17 செயற்கைகோள் மொபைல் சேவையை விரிவாக்கம் செய்வதற்கான அலைக்கற்றைகளின் திறனை அதிகரிக்க உதவும் என்று கூறியுள்ளார். ஏரியான் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படும் 21வது செயற்கைகோள் ஜிசாட் 17 என்பது குறிப்பிடத்தக்கது.