இந்தியாவின் அதிவேக ‘பிரமோஸ் சூப்பர்சோனிக்’ ஏவுகணை சோதனை வெற்றி
சண்டிப்பூர்: இந்தியாவின் அதிவேக 'பிரமோஸ் சூப்பர்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது.
இந்தியா - ரஷியா கூட்டு தயாரிப்பான 'பிரமோஸ் சூப்பர்சோனிக்' ஏவுகணை சுமார் 2 ஆயிரம் கிலோ எடை கொண்டதாகும். இந்த ஏவுகணை 200 கிலோ வெடிப் பொருளுடன் சுமார் 290 கிலோ மீட்டர் தூரம் வரை பறந்து சென்று தாக்கும் ஆற்றல் கொண்டது. நிர்ணயிக்கப்பட்ட பாதையில் செல்லும்போது, தேவைப்பட்டால் இலக்கிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் இலக்கின் போக்குக்கு ஏற்ப திசைமாறிச் சென்று தாக்கும் வல்லமை கொண்டது.
இந்தியா மற்றும் ரஷ்யா இணைந்து தயாரித்த இந்த ஏவுகணை 290 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும். மணிக்கு 3 ஆயிரத்து 700 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடியது. தரை, வான் மற்றும் கடலில் இருந்து இந்த ஏவுகணையை எதிரிகளை நோக்கி ஏவ முடியும்.
இதற்கு முன் பல முறை பிரமோஸ் ஏவுகணை சோதனை செய்யப்பட்டது. இந்நிலையில், பிரமோஸ் ஏவுகணையில், அவ்வப்போது புதுப்புது அம்சங்கள் சேர்க்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது போர் கப்பலை எதிர்க்கும் திறன் சோதிக்கப்பட்டது.
ஒடிசா மாநிலம் சண்டிப்பூரில் இந்தச் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, 'பிரமோஸ் சூப்பர்சோனிக்' ஏவுகணைக்கு போட்டியாக, சீனா 'சூப்பர்சோனிக் எச்டி-1' ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தி இருக்கிறது. இது, பிரமோஸ் ஏவுகணையை விட விலை மலிவானது என்றும், பாகிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இந்த ஏவுகணை விற்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.