செவ்வாயின் முதல் படங்களை அனுப்பி வைத்த மங்கள்யான்.. மோடியிடம் காட்டிய பின் ரிலீஸ் செய்த இஸ்ரோ!
டெல்லி: இந்தியாவின் மங்கள்யான் தனது வேலையை ஆரம்பித்து விட்டது. செவ்வாய் கிரகத்தை அது படம் எடுத்து அனுப்பியுள்ளது.
நேற்று காலை மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப் பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது. இதையடுத்து தனது பணியை அது தொடங்கியுள்ளது.
செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை அது படம் எடுத்து அனுப்பியுள்ளது. அந்தப் படங்களைப் பரிசோதித்த பின்னர் பிரதமர் மோடியிடம் முதல் படத்தைக் காட்டினர் இஸ்ரோ விஞ்ஞானிகள். அதைத் தொடர்ந்து ஒரு படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
கலர் கலர் படங்கள் வருகை
மங்கள்யான் எடுத்துள்ள ஏராளமான வண்ணப் புகைப்படங்கள் இஸ்ரோவின் தரைக் கட்டுப்பாட்டு மையத்திற்கு வந்து சேர்ந்துள்ளன.
பிராசஸிங்கில் படங்கள்
அந்தப் படங்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் பரிசோதித்தனர். அனைத்துப் படங்களும் நன்றாக வந்திருப்பதாக கூறப்படுகிறது.
பத்து படங்கள்
மங்கள்யான் விண்கலம் முதல் கட்டமாக 10 படங்களை அனுப்பியுள்ளதாக தெரிகிறது. செவ்வாயின் மேற்பரப்பை மங்கள்யான் படம் பிடித்துள்ளது. கிரகத்தில் உள்ள கிரேட்டர்களும் தெளிவாகத் தெரிகின்றன.
சூப்பர் தெளிவான படங்கள்
படங்கள் அனைத்துமே நல்ல தெளிவுடன், கிளாரிட்டியுடன் கூடியதாக உள்ளதாக கூறப்படுகிறது.
முதலில் மோடிக்கு ஒரு காப்பி!
இந்தப் படங்களை பிரதமர் மோடியிடம் இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான இஸ்ரோ குழு காட்டியது. படத்தைப் பார்த்த மோடி, விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு தெரிவித்தார். செவ்வாயின் ஒரு படத்தை பிரேம் போட்டு பிரதமரிடம் இஸ்ரோ குழுவினர் கொடுத்தனர்.
முதல் வேலை கேமராவுக்கே
மங்கள்யான் விண்கலத்தில் ஐந்து முக்கியமான உபகரணங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதில் முதலில் கலர் கேமராதான் முடுக்கி விடப்பட்டுள்ளது. செவ்வாய் சுற்றுப் பாதையில் மங்கள்யான் நுழைந்த பின்னர் கேமரா இயக்கி வைக்கப்பட்டது. இதையடுத்து அது படம் பிடிக்கும் வேலையைத் தொடங்கியுள்ளது.
நேற்று காலை 8 மணிக்கு
முன்னதாக நேற்று காலை 8 மணியளவில் மங்கள்யான் விண்கலம், செவ்வாயின் சுற்றுப் பாதையில் நுழைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.