கின்னஸ் சாதனைக்குக் குறி வைக்கும் 111 வயது 'கன்னி'ப் பாட்டி!
சாதனைக்கு வயதில்லை என்பதற்கு குஞ்சன்னம் என்ற இந்தப் பாட்டியே மிகச் சிறந்த உதாரணம். திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வரும் இவருக்கு தற்போது வயது 111. தனது பழைய சான்றிதழ்கள் மூலம் உலகிலேயே திருமணமாகாத வயதான பெண்மணி நான் தான் என கின்னஸ் சாதனை நிறுவனத்திடம் விண்ணப்பித்துள்ளார் இவர்.
கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் வசித்து வரும் குஞ்சன்னம், தனக்கு பெயர் சூட்டு விழா நடந்த தேவாலயத்தின் சான்றிதழை தனது வயதிற்கு சான்றாக காட்டுகிறார்.
இச்சான்றிதழில், கடந்த 1903ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி பிறந்தவர் குஞ்சன்னம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘எங்கள் பாட்டி நூறு வயதைக் கடந்தவர் எனத் தெரியும். ஆனால் வயது துல்லியமாகத் தெரியாது. எனவே கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக கஷ்டப்பட்டு அவரது பெயர் சூட்டு விழா நடைபெற்ற சர்ச் மூலமாக சான்றிதழ் பெற்றோம்' எனத் தெரிவித்துள்ளார் அவரது கொள்ளுப் பேத்தி.
பால்ய பருவத்திலேயே பெற்றோரை இழந்து விட்ட குஞ்சன்னம், தனது தோள்களில் குடும்ப பாரத்தை ஏற்றிக் கொண்டதால் திருமணமே செய்து கொள்ளவில்லையாம். தனது உடன் பிறந்தோரைப் படிக்க வைத்து திருமணம் செய்து கொடுத்துள்ளார். தற்போது அவர்கள் வழி குடும்பத்தாருடனேயே அவர் வசித்து வருகிறார்.
ஏற்கனவே, உலகிலேயே திருமணமாகாத வயதான பெண்மணி என லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார் குஞ்சன்னம். வரும் ஜனவரி மாதம் இதற்கான அதிகாரப்பூர்வமாக சான்றிதழை லிம்கா வழங்க உள்ளதாம்.
தற்போது 111 வயதாகும் குஞ்சன்னத்திற்கு இருமல், சளி தவிர இதுவரை வேறு எந்த உடல் நலக் கோளாறும் வந்ததில்லை என அவரது குடும்பத்தார் கூறுகின்றனர்.
சைவ உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வரும் குஞ்சன்னத்திற்கு, தற்போதும் தெளிவான பார்வை மற்றும் கேட்கும் திறன் உள்ளதாம். தினசரி வாக்கிங் போகிறாராம்.
அவரது அண்டை வீட்டாரான கே.வி.மோகன் என்பவர் கூறுகையில், ‘மிகவும் அன்பானவர் குஞ்சன்னம் பாட்டி. எங்களிடம் அன்போடு பேசுவார். அனைவருக்கும் பிடித்தமானவர். அவரை நான் தினசரி போய் பார்ப்பேன்' எனத் தெரிவித்துள்ளார்.