டெபாசிட்டை இழந்து சோகத்தில் தவிக்கும் இந்தியாவின் பணக்கார வேட்பாளர்!
பாடலிபுத்திரா: லோக்சபா தேர்தலில் இந்தியாவின் பணக்கார வேட்பாளரான ரமேஷ் குமார் ஷர்மான ஓட்டு எண்ணிக்கையில் மூன்று இலக்கத்தை தாண்டுவதற்கே திண்டாடி போய்விட்டார்.
பீகார் மாநிலம், பாடலிபுத்திரா லோக்சபா தொகுதியில் ரமேஷ் குமார் ஷர்மா சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். வேட்புமனுவில் தனக்கு ரூ.1,107 கோடி சொத்து மதிப்பு இருந்ததாக தெரிவித்திருந்தார். சுயேட்சையாக போட்டியிட்டாலும், இந்தியாவின் பணக்கார வேட்பாளர் என்ற அடையாளத்துடன் களம் கண்டார்.
இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை தேர்தல் முடிவுகள் வெளியானது. தேர்தலில் கிடைத்த ஓட்டு எண்ணிக்கை அவருக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது. அதாவது, அவரது சொத்து மதிப்புக்கு தக்க எண்ணிக்கையில் ஓட்டுக்களை பெறுவதற்கே திண்டாடிவிட்டார்.
ரூ.1,107 கோடி சொத்து மதிப்புடைய அவர், மொத்தமே 1,558 வாக்குகளை பெற்றார். மொத்த ஓட்டுக்களில் ஷர்மாவுக்கு 0.14 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தது. மொத்தம் போட்டியிட்ட 26 வேட்பாளர்களில் கடைசியிலிருந்து 4வது இடத்தையே அவர் பிடிக்க முடிந்தது.
இந்த தொகுதியில் பாஜகவை சேர்ந்த ராம் க்ரிபால் யாதவ் வெற்றி பெற்றார். அவருக்கு 5 லட்சம் வாக்குகள் கிடைத்தன. மொத்த வாக்குகளில் 47.28 சதவீதத்தை அவர் பெற்றார்.
இதற்கு அடுத்த இடத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவின் மகள் மிஷா பார்தி 4.7 லட்சம் ஓட்டுக்களை பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். இவருக்கு 43.63 சதவீத வாக்குகள் கிடைத்தது.
இதனிடையே, இந்தியாவின் இரண்டாவது பணக்கார வேட்பாளர் என்ற பெருமையை தெலுங்கானாவை சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் கோண்டா விஸ்வேஷ்வர் ரெட்டி பெற்றார். வேட்பு மனுவில் ரூ.895 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்திருந்தார். தெலுங்கானா மாநிலம் செவெல்லா தொகுதியில் போட்டியிட்டார். தேர்தல் முடிவுகளில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி வேட்பாளர் ரஞ்சித் ரெட்டியிடம் 14,317 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
இந்தியாவின் மூன்றாவது பணக்கார வேட்பாளர் என்ற பெருமையை மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் மகன் நகுல்நாத் பெற்றார். இவர் ரூ.660 கோடி சொத்து மதிப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். இவர் சிந்த்வாரா தொகுதியில் 35,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்தியாவின் நான்காவது பணக்கார வேட்பாளர் என்ற பெருமையை தமிழகத்தின் பிரபல தொழிலதிபரான வசந்தகுமார் பெற்றிருக்கிறார். ரூ.417 கோடி சொத்து இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி தொகுதியில் பாஜக வேட்பாளரான பொன்.ராதாகிருஷ்ணனை இவர் 2.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
ஐந்தாவது இடத்திலும் காங்கிரஸ் கட்சியை ஜோதிர்ஆதித்ய சிந்தியா உள்ளார். இவர் தனக்கு ரூ.374 கோடி சொத்து மதிப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் குனா லோக்சபா தொகுதியில் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் கிருஷ்ண பால் சிங்கை தோற்கடித்துள்ளார்.