”நெக்ஸ்ட் ஜெனரேஷன்” மார்க்-3 ராக்கெட் விரைவில் விண்ணில் பாயும் - "இஸ்ரோ" கிரண்குமார்
ஹைதராபாத்: இந்தியாவின் அடுத்த தலைமுறைக்கான மார்க்-3 ராக்கெட் இந்த வருட இறுதிக்குள் உறுதியாக விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார் தெரிவித்துள்ளார்.
நேற்றைய பி.எஸ்.எல்.வி-32 ராக்கெட் வெற்றிகரமாகமான ஏவுதலைத் தொடர்ந்து இதுகுறித்து பேசிய அவர், "இஸ்ரோவின் சாதனைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. தற்போது பி.எஸ்.எல்.வி. சி-32 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
கடல்சார் ஆராய்ச்சிக்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் வரிசையில் 7 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. அந்த வகையில் 6 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள ஒரே ஒரு செயற்கைக்கோள் அடுத்த மாதம் ஏவப்பட உள்ளது.
அடுத்த 2 மாதத்தில் இந்த 7 செயற்கைக்கோள்களின் பயன்பாட்டை நாம் முழுமையாக பெறமுடியும். இந்த திட்டம் வெற்றி பெறுவதன் மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா மைல்கல்லை தொடுவது ஒரு வரலாற்று சாதனை ஆகும்.
நம் நாட்டில் ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்தில் தன்னிறைவு பெறும் தூரம் வெகுதொலைவில் இல்லை என்ற நிலை உள்ளது. அதிக எடை கொண்ட அடுத்த தலைமுறைக்கான மார்க்-3 ராக்கெட்டில் 2 ஆவது கட்ட சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது. 3 ஆவது கட்ட சோதனை விரைவில் நடக்க உள்ளது. இந்த ஆண்டு இறுதியிலேயே மார்க்-3 ராக்கெட்டை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளோம்" என்று கூறினார்.