பதன்கோட் தாக்குதல்: தீவிரவாதிகளை அடையாளம் காணும் பொருட்டு இன்டர்போலுக்கு ’பிளாக் கார்னர்’ நோட்டீஸ்
டெல்லி: பதன்கோட் விமானப் படை தளத்தில் சுட்டு வீழத்தப்பட்ட பயங்கரவாதிகள் குறித்து அடையாளம் காணும் பொருட்டு, என்.ஐ.ஏ. இன்டர்போல் உதவியை நாடும் பொருட்டு, பிளாக் கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது..
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப் படை தளத்தில் கடந்த 2 ஆம் தேதி நுழைந்த 6 தீவிரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில் 7 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பதன்கோட் தாக்குதலில் பாகிஸ்தானில் இருந்து மூளையாக செயல்பட்ட பயங்கரவாத அமைப்பின் தலைவன் மவுலானா மசூத் அசார் விமான கடத்தலில் தொடர்புடைய அவனது சகோதரனான அப்துல் ராப் அஸ்கர் உட்பட நான்கு பேர்தான் காரணம் என்று தேசிய புலனாய்வு துறையினர் உரிய ஆதாரங்களை பாகிஸ்தானிடம் வழங்கியுள்ளனர்.
விமானப்படை தளம் முழுவதும் சோதனை நடத்தி வரும் தேசிய புலனாய்வு பிரிவு முக்கிய ஆதாரங்களை சேகரித்து வருகிறது. மேலும் அந்த பகுதியில் சேகரிக்கப்பட்ட தீவிரவாதிகளின் கை தடமும், எல்லையில் கண்டுபிடிக்கப்பட்ட தடமும் தடையவியல் ஆய்வகத்திற்கு அனுப்பட்டு உள்ளது. இண்ணும் சந்தேகத்திற்கு இடமான இருவர் ராணுவ உடையில் சுற்றுவதாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் பதன்கோட் விமானப்படை தளத்தில் செல்போன், பைனாகுலர், ஏ.கே. 47 துப்பாக்கிகள் மற்றும் 40-50 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
பதன்கோட் விமானப்படை தளத்தில் கொல்லப்பட்ட 6 தீவிரவாதிகளின் உடல்களையும் அடையாளம் கண்டறிய சர்வதேச போலீசுக்கு (இன்டர்போல்) 'பிளாக் கார்னர்' நோட்டீஸ் அனுப்பட்டு உள்ளது என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.