புயலால் நிலை குலைந்துள்ள பிஜிக்கு 40 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பும் இந்தியா
டெல்லி: வின்ஸ்டன் புயலால் நிலை குலைந்து போயுள்ள பிஜிக்கு 40 டன் மருந்து, உணவு மற்றும் கூடாரங்களை இந்தியா அனுப்பு வைக்கிறது.
தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான பிஜியை கடந்த சனிக்கிழமை வின்ஸ்டன் புயல் தாக்கியது. பல்வேறு குட்டித் தீவுகளை உள்ளடக்கிய பிஜியில் 9 லட்சம் பேர் வசிக்கிறார்கள்.
புயலால் குட்டி குட்டித் தீவுகளில் உள்ள கட்டிடங்கள் தரைமட்டம் ஆகின, பயிர்களும் சேதம் அடைந்தன. இந்நிலையில் இடிபாடுகளில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது. பிஜி வரலாற்றிலேயே இது தான் மோசமான புயல் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தங்களுக்கு உதவி செய்யுமாறு பிஜி அரசு உலக நாடுகளை கேட்டுக் கொண்டுள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சீனா ஆகிய நாடுகள் பிஜிக்கு உதவ முன்வந்துள்ளன.
இந்நிலையில் பிஜிக்கு 40 டன் மருந்து, உணவு மற்றும் கூடாரங்களை விமானப்படை விமானம் மூலம் அனுப்பி வைக்கிறது இந்தியா. 20 டன் மருந்து மற்றும் உணவுப் பொருட்களுடன் விமானப்படை விமானம் டெல்லியில் இருந்து சென்னை செல்கிறது. அங்கு 20 டன் கூடாரங்களை ஏற்றிக் கொண்டு விமானம் பிஜி செல்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயலால் பிஜி தீவில் உள்ள பல கிராமங்கள் மோசமாக சேதமடைந்துள்ளதால் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.