இந்திய வரலாற்றில் முதன் முறையாக ரியோ ஒலிம்பிக்கு 90 வீரர்கள் தகுதி: கிரண் ரிஜிஜு தகவல்
டெல்லி: பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கு இந்தியாவிலிருந்து 90 விளையாட்டு வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான வீரர்கள் இந்தியாவின் சார்பில் பங்கேற்க உள்ளதாக மத்திய இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவத்துள்ளார்.
பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனிரோவில், வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் ஆகஸ்ட் 21-ம் தேதி வரை நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பல நாடுகளிலிருந்தும் 10,500க்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதில் இந்திய விளையாட்டு வீரர்கள் 90 பேர் தகுதி பெற்றுள்ளனர். இது ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா அனுப்பும் மிக அதிகமான விளையாட்டு வீரர்கள் என்று உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
மக்களவையில் கேள்வி நேரத்தின் போது, மத்திய விளையாட்டு துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் சார்பில், அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், 58 வீரர்கள் தனிநபர் போட்டிகளிலும், ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணியில் 32 வீரர்களும் ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்ற வீரர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பயிற்சி அளித்து வருவதாகவும் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். அப்போது பேசிய திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் கால்பந்து வீரரருமான பிரசுன் பானர்ஜி, இந்தியாவில் திறமையான வீரர்கள் இருப்பதாகவும் ஆனால் ஏராளமான பிரச்சினைகளை சந்தித்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்த கிரண் ரிஜிஜு விளையாட்டுத் துறையை மேம்படுத்த அனைத்து ஆலோசனைகளும் ஏற்றுக் கொள்ளப்படும் என உறுதியளித்தார்.