ஓவர் விளைச்சல்.. ஆஸ்திரேலியாவுக்கு பறக்கப்போகிறது இந்திய மாம்பழங்கள்
அல்போன்ஸா, கேசர் வகை மாம்பழங்களின் விளைச்சல் அதிகமாக இருக்கும் என்பதால் அவற்றை ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்ய இந்தியா நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
டெல்லி: இந்தியாவில் இந்த ஆண்டு மாம்பழங்களின் விளைச்சல் அமோகமாக இருக்கும் என்பதால் அல்போன்ஸா, கேசர் வகை மாம்பழங்கள் ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் மாம்பழங்களின் சாகுபடி அதிகரித்து வருவதால் தேவைக்கு போக மீதம் உள்ள பழங்கள் அமெரிக்கா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
முக்கனிகளில் ஒன்றான மாம்பழங்களை முதல்முறையாக ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்ய இந்தியா நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. அங்கு அந்நாட்டு மாம்பழ சீசன் முடிவடைந்த பிறகு இந்தியாவில் இருந்து உயர்வகை மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்படும்.
மாம்பழங்கள் ஏற்றுமதி செய்வது குறித்து இந்தியாவை சேர்ந்த பிரபல ஏற்றுமதியாளர் ஒருவர் கூறுகையில், ஆஸ்திரேலியாவுக்கு இந்திய மாம்பழங்களை ஏற்றுமதி செய்வது தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன்னரே முடிவு செய்யப்பட்டது. ஆனால், மாம்பழங்களின் தரம் குறித்து பல்வேறு நிபந்தனைகளும், கட்டுப்பாடுகளையும் ஆஸ்திரேலிய ஆஸ்திரேலிய நாட்டின் உணவுப்பொருள் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு துறை விதித்திருந்ததால் ஏற்றுமதி செய்யும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது என கூறியுள்ளார்.
இந்த ஆண்டு விளைச்சல் அதிகரித்துள்ளதால் கடந்த ஆண்டைக் காட்டிலும் மாம்பழ ஏற்றுமதியும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.