துணை தூதர் தேவ்யானிக்கு கூடுதல் அந்தஸ்து வழங்கி மத்திய அரசு உத்தரவு
டெல்லி: அமெரிக்காவால் அவமதிக்கப்பட்ட துணை தூதர் தேவ்யானிக்கு கூடுதல் அந்தஸ்து வழங்கி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகத்தில் துணை தூதராக பணிபுரிந்து வருபவர் தேவ்யானி கோப்ரகடே. அவருடைய வேலைக்காரப் பெண் சங்கீதா என்பவருக்கு விசா பெற்றதில் மோசடி செய்ததாக குற்றம்சாட்டி, அமெரிக்க போலீசார் பெண் தூதர் தேவயானியை கைது செய்தனர். தனது குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு திரும்பும்போது வீதியில் அவரை கைது செய்த போலீசார், தேவ்யானிக்கு கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றனர்.
அத்துடன் அவருடைய ஆடைகளை களைந்து சோதனை நடத்தியதுடன், போதை வழக்கில் கைதான கிரிமினல் குற்றவாளிகளுடன் அவரை அடைத்து வைத்து அவமரியாதை செய்தனர். இந்த சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அமெரிக்காவுக்கு எதிராக பல்வேறு பதிலடி நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.