இந்தியாவின் ராணுவ பலத்தை பறை சாற்றிய குடியரசு தின விழா அணிவகுப்பு
டெல்லி: இந்தியாவின் ராணுவ பலத்தை, அதன் பாரம்பரியத்தை, நாட்டின் சாதனைகளைப் பறை சாற்றும் வகையில் டெல்லியில் இன்று காலையில் நடந்த 65வது குடியரசு தின விழா அணிவகுப்பு அமைந்தது.
ராஜ்பாத்தில் நடந்த கண்கவர் அணிவகுப்பை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, சிறப்பு விருந்தினரான ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோரும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் பார்த்து மகிழ்ந்தனர்.
ரெய்சினா ஹில்லிலிருந்து
மத்திய டெல்லியில் அமைந்துள்ள ரெய்சினா ஹில் பகுதியிலிருந்து அணிவகுப்பு தொடங்கியது. செங்கோட்டை வரை அணிவகுப்பு நடந்தது.
வேற்றுமையிலும் ஒற்றுமை
இந்தியாவின் மிக முக்கிய பலமான வேற்றுமையிலும் ஒற்றுமை என்பதை வெளிக்காட்டும் வகையிலான அம்சங்கள் இந்த அணிவகுப்பில் இடம் பெற்றிருந்தன.
எட்டு கிலோமீட்டர் தூர அணிவகுப்பு
கிட்டத்தட்ட எட்டு கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்த இந்த அணிவகுப்பை ஆயிரக்கணக்கானோர் பார்த்து உற்சாகப்படுத்தினர்.
இந்தியாவின் பெருமை - தேஜா
இந்தியாவின் பெருமையைப் பறை சாற்றும் வகையில் முற்றிலும் இந்திய தொழில்நுட்பத்தில், இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட இலகு ரக போர் விமானமான தேஜாஸ் அணிவகுப்பில் இடம் பெற்றிருந்தது.
அர்ஜூன் டேங்குகள்
அதேபோல இந்தியாவின் முக்கியப் பீரங்கியான அர்ஜூன் எம்.கே. 11 டேங்குகளும் பேரணியில் இடம் பெற்றிருந்தது.
சூப்பர் ஹெர்குலிஸ்
சி 130ஜே சூப்பர் ஹெர்குலிஸ் போக்குவரத்து விமானம், மிகப் பெரிய சி 17 குளோப் மாஸ்டர் எனப்படும் கனரக விமானம் ஆகியவையும் இடம் பெற்றிருந்தன.
அஸ்த்ரா - ஹெலினா ஏவுகணைகள்
டிஆர்டிஓ வடிவமைத்த அஸ்த்ரா, ஹெலினா ஏவுகணைள், நெட்ரா யுஏவி, முந்த்ரா கண்காணிப்பு விமானம், நிஷாந்த் ஆளில்லா உளவு விமானம் ஆகியவையும் பார்வையாளர்களைக் கவர்ந்தன.
கெஜ்ரிவால்...
இன்றைய அணிவகுப்பைப் பார்த்த பார்வையாளர்களில் முக்கியமானவராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் இடம் பெற்றிருந்தார். பல்வேறு நாடுகளின் தூதர்களும் இதைப் பார்வையிட்டனர்.
கடும் பனிக்கு மத்தியிலும்
டெல்லியில் இன்று கடும் பனியும், பனிமூட்டமும் இருந்தது. இருந்தாலும் மக்கள் அதைப் பொருட்படுத்தாமல் ராஜ்பாத்தில் குவிந்திருந்தனர்.
ஏவுகணைகள் நிறுத்தம்
குடியரசு தின விழா அணிவகுப்பை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. டெல்லியின் முக்கிய இடங்களில் தரையிலிருந்து வானில் உள்ள இலக்குகளைத்
தாக்கும் ஏவுகணைகள் நிறுத்தப்பட்டிருந்தன.
அமர் ஜவான் ஜோதியில் அஞ்சலி
முன்னதாக பிரதமர் மன்மோகன் சி்ங், பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி, முப்படைத் தளபதிகள் ஆகியோர் இந்தியா கேட் பகுதியில் உள்ள போர் நினைவுச் சின்னமான அமர்ஜவான் ஜோதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.