அணு ஆயுதம் ஏந்திச் செல்லும் பிரித்வி-2 ஏவுகணை சோதனை வெற்றி
பாலசோர்: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அணு ஆயுதம் தாங்கி செல்லும் திறனுடைய பிரித்வி 2 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அணுஆயுதம் தாங்கி செல்லும் திறன் பெற்ற பிரித்வி 2 ஏவுகணை ஒடிசாவின் சந்திபூர் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இன்று காலை 10.05 மணியளவில் ஒருங்கிணைக்கப்பட்ட சோதனை தளத்தின் 3வது பிரிவு ஏவுதள பகுதியில் இருந்து இந்த பரிசோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இது 350 கி.மீட்டர் தொலைவில் இலக்கை தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி-.ஓ.) விஞ்ஞானிகள் கண்காணிப்பில் புதிதாக உருவாக்கப்பட்ட உயர்மட்ட குழுவினரால் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.
ஏவுகணை பாதை டி.ஆர்.டி.ஓ. ராடர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன. இந்த ஏவுகணை 500கி.கிராம் முதல் ஆயிரம் கி.கிராம் வரை போர் கருவிகளை சுமந்து செல்லும் திறன் பெற்றது.