அக்னி -1 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை
பாலசோர், ஒடிஷா: இந்தியா தனது அணு ஆயுத ஏவுகணையான அக்னி -1 ஏவுகணையை இன்று வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்த்தது.
700 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலக்கைத் தாக்கும் வல்லமை பெற்றது அக்னி-1 ஏவுகணை. இன்று ஒடிஷா மாநிலம் பாலசோரில் உள்ள ஏவுதளத்திலிருந்து இந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
ராணுவத்தின் சார்பில் இந்த சோதனை நடத்தப்பட்டது. தரையிலிருந்து தரையில் உள்ள இலக்கைத் தாக்கக் கூடிய இந்த அக்னி-1 ஏவுகணை, திட எரிபொருளால் இயங்கக் கூடியதாகும். நடமாடும் லாஞ்சரிலிரு்து இன்று காலை 9.15 மணிக்கு ஏவுகணை சோதனை செய்து பார்க்கப்பட்டது.
வீலர் தீவில் (தற்போது இதன் பெயர் அப்துல் கலாம் தீவு) உள்ள ஒருங்கிணைந்த ஏவுகணை செலுத்தும் தளத்தில் இச்சோதனை நடைபெற்றது.
சோதனை முழு. வெற்றி பெற்றதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தனது இலக்கை ஏவுகணை 9 நிமிடம் 36 விநாடிகளில் எட்டியதாக தெரிவிக்கப்பட்டது.
அக்னி-1 ஏவுகணை ஏற்கனவே ராணுவத்தில் சேர்க்கப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.
12 டன் எடை கொண்ட அக்னி -1 ஏவுகணை, 15 மீட்டர் நீளம் கொண்டது. ஒரு டன்னுக்கும மேற்பட்ட பேலோடை இதில் ஏற்றிச் செல்லமுடியும். பேலோடைக் குறைத்தால் இதன் தாக்குதல் தூரத்தை அதிகரிக்க முடியும்.
கடைசியாக 2015ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி அக்னி-1 ஏவுகணை பரிசோதிக்கப்பட்டது. அப்போதும் அந்த சோதனை வெற்றி பெற்றது நினைவிருக்கலாம்.