பாக். போர் விமானம் வந்தால் அவ்வளவுதான்.. 2 ஏவுகணைகள் திடீர் சோதனை.. நெஞ்சை நிமிர்த்தும் இந்தியா
Recommended Video
புவனேஸ்வர்: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதட்டம் உருவாகியுள்ள நிலையில், தரையில் இருந்து விமானங்களை குறிபார்த்து அழிக்கக்கூடிய 2 ஏவுகணைகளை இன்று இந்திய பாதுகாப்புத்துறை வெற்றிகரமாக சோதித்து பார்த்துள்ளது.
பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 வகை விமானங்கள் இன்று அதிகாலை நுழைந்து பயங்கரவாதிகளின் முகாம்களை தாக்கி அழித்துள்ளன.
இதையடுத்து பதிலடியாக பாகிஸ்தான் விமானப்படை இந்திய எல்லைக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தக்கூடும் என்று எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எந்த தாக்குதலையும் எதிர்கொள்ள, இந்திய முப்படைகளும் தயார்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த பதட்டமான சூழ்நிலைக்கு நடுவே ஒடிசாவில் இன்று இரு ஏவுகணை சோதனைகளை வெற்றிகரமாக செய்துள்ளது இந்தியா. இந்த ஏவுகணைகள் தரையிலிருந்து விண்ணுக்கு பாய்ந்து போர் விமானங்களை குறிபார்த்து தாக்கி அழிக்கக் கூடிய வல்லமை கொண்டவையாகும்.
"உங்கள் விமானங்கள் எங்கள் நாட்டுக்குள் வந்தால், இந்த ஏவுகணைகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்" என்று கூறுவதைப் போல இந்தியா இன்று இந்த ஏவுகணை சோதனைகளை நடத்தி உள்ளது.
இந்திய பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுத் துறை, இந்த சோதனையை வெற்றிகரமாக நடத்திக் காட்டி, பாகிஸ்தானுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.