பிருத்வி -2 ஏவுகணை சோதனை வெற்றி
சந்திப்பூர், ஒடிசா: இந்தியாவின் பிருத்வி - 2 ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலம் சந்திப்பூருக்கு அருகில், பிருத்வி -2 ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிருத்வி -2 ஏவுகணை 500 -1000 கிலோ எடையுள்ள அணு ஆயுதங்கள், வெடிபொருள்களைச் சுமந்து, 350 கிலோமீட்டர் தொலைவு வரை உள்ள தரை இலக்குகளை தாக்கும் திறன் படைத்தது.
இது குறித்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஒருங்கிணைந்த ஆய்வு மைய இயக்குநர் எம்.வி.கே.வி. பிரசாத் கூறுகையில், "காலை 9.20 மணிக்கு ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது' என்று தெரிவித்துள்ளார்.
2003 ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்க்கப்பட்ட இந்த ஏவுகணையை பயிற்சிக்காக அவ்வப்போது சோதனைச் செய்வது வழக்கம். அதன் ஒருபகுதியாகவே இன்று இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இன்றைய சோதனையின் போது பிருத்வி-2 ஏவுகணை திட்டமிட்டபடி, இலக்கை சரியாக தாக்கியதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடைசியாக பிருத்வி-2 ரக ஏவுகணை, கடந்த ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி சோதனை செய்யப்பட்டது.