மானசரோவருக்கு புனித யாத்திரை சென்ற இந்தியர்கள்.. திடீரென அனுமதி மறுத்து தடுத்து நிறுத்திய சீனா
கவுகாத்தி: கைலாஷ் மானசேரோவருக்கு புனித யாத்திரை மேற்கொள்ள சென்ற 50 இந்திய யாத்ரீகர்களுக்கு சீனா திடீரென அனுமதி மறுத்துள்ளது.
இமயமலை தொடரில் கைலாஷ்- மானசரோவரில் புகழ்பெற்ற சிவன் கோவில் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 6, 638 மீ உயரத்தில் உள்ள இங்கிருந்து தான், சிந்து, சட்லெச், பிரம்மபுத்திரா உள்ளிட்ட ஆறுகள் உற்பத்தியாகின்றன.
கைலாஷ்- மானசரோவர் கோவிலுக்கு வருடந்தோறும் புனிதப் பயணம் மேற்கொள்வது இந்துக்களின் வழக்கம். இதற்காக ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை இந்திய அரசு அனுமதி வழங்குகிறது. இந்நிலையில் யாத்திரை மேற்கொள்பவர்கள் இந்திய- சீன எல்லையின் சிக்கிம் மாநிலம் சென்று நாதுலா கணவாய் வழியாக செல்ல சீனா அரசு அனுமதியளித்திருந்தது.
இதன்படி இந்த ஆண்டு இந்திய யாத்ரீகர்கள் 50 பேர் முதல் பேட்ஜாக கடந்த ஜூன் 16-ம் தேதி கைலாஷ் மானசரோவர் யாத்திரை புறப்பட்டனர். இவர்கள் சீனாவின் நாதுலா கணவாய் வழியாக இப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு சிக்கிம் மாநிலம் சென்று அங்கிருந்து சீனாவின் நாதுலா கணவாய் சென்றனர். அப்போது சீன அதிகாரிகள் அவர்களை தடுத்து நிறுத்தி அனுமதி மறுத்தனர். இதனால் கடந்த ஒரு வாரமாக யாத்ரீகர்கள் அங்கேயே முடங்கியுள்ளனர்.
மேலும் இரண்டாம் கட்டமாக புறப்பட்ட மேலும் சில இந்திய யாத்ரீகர்கள் சிக்கிம் மாநில தலைநகர் காங்டாங் நகரிலேயே தடுத்த நிறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தாண்டு கைலாஷ் - மனோசரோவர் செல்வதற்கு 1,400 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.