ஜார்க்கண்ட்டில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது பாஜக- தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டசபை தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 23-ந் தேதி எண்ணப்படுகின்றன.
இன்று 5வது கட்ட வாக்குப் பதிவு முடிவடைந்த நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின. இந்தியா டுடே- சிசிரோ போஸ்ட் இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவு:
பாரதிய ஜனதா கட்சி 41 முதல் 49 தொகுதிகள் வரை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 15 முதல் 19 இடங்களையும் காங்கிரஸ் கட்சி வெறும் 7 முதல் 11 இடங்கள் வரையும் கைப்பற்றுமாம்.
இதர் கட்சிகள் 8 முதல் 12 இடங்களில் வெல்லுமாம்.
2009 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 23 இடங்களைத்தான் பெற்றிருந்தது. தற்போது தனிப்பெரும்பான்மையுடன் 41 முதல் 49 இடங்கள் வரை வெல்லும் என்பது அக்கட்சி மிகப் பெரிய வெற்றியாகும்.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் 2009 தேர்தலில் 28 இடங்களைப் பெற்றிருந்தது. தற்போது 7 இடங்கள்தான் என்கிற போது மிகப் பெரிய பின்னடைவாகும்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவைப் பொறுத்தவரையில் தன்னுடைய வாக்கு வங்கியைத் தக்க வைத்திருக்கிறது என்றே சொல்ல முடியும். 2009 தேர்தலில் அக்கட்சி 18 இடங்களில் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.