கேரளாவில் ஆட்சியை இழக்கிறது காங்; மீண்டும் இடதுசாரிகள் அரசு... இந்தியா டிவி சர்வே
டெல்லி: கேரளாவில் ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணி தேர்தலில் தோல்வியை தழுவும் என கூறியுள்ள இந்தியா டிவி, சி வோட்டர், கருத்துக் கணிப்பு, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கூட்டணி 89 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில சட்டசபைக்கு தேர்தல் தேதிகள் நேற்று அறிவிக்கப்பட்டன.
தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்புள்ள நிலவரப்படி, புதுவை தவிர்த்து தமிழ்நாடு, கேரளா, அசாம் மேற்கு வங்காளம் ஆகிய 4 மாநிலங்களின் வெற்றி வாய்ப்பு குறித்து இந்தியா டி.வி.க்காக சி வோட்டர்ஸ் நிறுவனம் கருத்து கணிப்பு நடத்தியது.
தமிழகத்தில் நோ மெஜாரிட்டி
அந்த கருத்து கணிப்பில் தமிழகத்தில், ஆளும் அதிமுக 116 இடங்களில் வெற்றி பெரும் எனக் கூறப்பட்டுள்ளது. திமுக கூட்டணி, இந்த தேர்தலில் 101 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டணி
இந்த கருத்துக்கணிப்புப்படி, மொத்தமுள்ள 234 தொகுதிகளில் சரி பாதிக்கு மேல் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்க எந்த கட்சியாலும் முடியாது என்று தெரிகிறது. கூட்டணி ஆட்சி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரசுக்கு தோல்வி
கேரளாவில் ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணி தேர்தலில் தோல்வியை தழுவும் என கூறியுள்ள கருத்துக் கணிப்பு, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கூட்டணி 89 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் என தெரிவித்துள்ளது. பாரதிய ஜனதா ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது.
உம்மன் சாண்டி அரசு
முதல்வர் உம்மன் சாண்டி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணியால், கேரளத்தில் 49 தொகுதிகளை மட்டுமே வெல்ல முடியும் என்று கூறியுள்ளது இந்த கருத்துக் கணிப்பு. கடந்த சட்டசபை தேர்தலில் இக்கூட்டணி 72 தொகுதிகளை வென்றிருந்தது.
மார்க்சிஸ்ட் கூட்டணி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளை உள்ளடக்கிய இடதுசாரி கூட்டணி கடந்த சட்டசபை தேர்தலில் 66 தொகுதிகளை வென்றிருந்தது. பாஜக 1 தொகுதியிலும், பிறர்-1 தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறுகிறது கருத்துக்கணிப்பு.