டெல்லியில் ஒபாமா... நாளை குடியரசு தினம்.. பாதுகாப்பு வளையத்தில் இந்தியா!
டெல்லி: இந்தியா தனது குடியரசு தின விழாக் கொண்டாட்டத்துக்குத் தயாராகி விட்டது. நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ள குடியரசு தின விழாவையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் முதல் கன்னி்யாகுமரி வரை பாதுகாப்பும், கண்காணிப்பும் பல மடங்கு உஷார்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லிக்கு ஒபாமா வந்துள்ளார். நாளைய குடியரசு தின விழாவில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதையடுத்து டெல்லி முழுவதும் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. டெல்லியில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். எங்கு பார்த்தாலும் பாதுகாப்புப் படையினரின் தலையாக உள்ளது.
பல அடுக்கு பாதுகாப்பு வளையத்தின் கீழ் டெல்லி வைக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பகுதிகளிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ஒரு இடம் விடாமல் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதே போல நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு வரலாறு காணாத அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. தீவிரவாத சம்பவங்கள் எதுவும் நடந்து விடாமல் தடுக்கும் வகையில் போலீஸாரும் பாதுகாப்புப் படையினரும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் அனைவரும் சிறப்பான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று டி.ஜி.பி. அசோக் குமார் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் மெரினா கடற்கரையில் காந்தி சிலை அருகில் குடியரசு தினவிழா அணிவகுப்பு நாளை நடைபெறுகிறது. ஆளுநர் ரோசய்யா கொடியேற்றி வைக்கிறார். இதில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதிகள் என விஐபிக்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இதையடுத்து மெரினா கடற்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
1 கி.மீ. தூரத்துக்குள் இருக்கும் வணிக வளாகங்கள் மற்றும் பொது மக்கள் கூடும் பகுதிகள் அனைத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மெட்டல் டிடெக்டர் கருவியின் உதவியுடன் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பாதுகாப்பு பணியில் போலீஸ் மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. குடியரசு தினத்தையொட்டி மெரினா பகுதியில் மட்டும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இணை ஆணையர் ஸ்ரீதர் தெரிவித்தார்.
சென்னை மாநகர் முழுவதும் குடியரசு தின பாதுகாப்புக்காக 18 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களிலும், கோயம்பேடு பஸ் நிலையத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
வர்த்தக வளாகங்கள், மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகள் என அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு முடுக்கி விடப்பட்டுள்ளது. சென்னைக்கு வெளியே நெடுஞ்சாலைகளில், எல்லைப் பகுதியில் வாகனச் சோதனைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேபோல தமிழகம் முழுவதும் வழிபாட்டு இடங்கள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.