தீவிரவாதத்தை பாகிஸ்தான் கட்டுப்படுத்த வேண்டும்.. கூட்டாக எச்சரித்த இந்தியா, அமெரிக்கா!
தீவிரவாதிகளை பாகிஸ்தான் தடுக்க வேண்டும் என இந்தியா, அமெரிக்கா சார்பில் கூட்டாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி: தீவிரவாதிகளை பாகிஸ்தான் தடுக்க வேண்டும் என இந்தியா, அமெரிக்கா சார்பில் கூட்டாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மாட்டீஸ் ஆகியோர் தலைமையிலான குழுவினர், இந்தியா வந்துள்ளனர்.
இவர்கள் டெல்லியில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான குழுவினருடன் நேற்று ஆலோசனை நடத்தினர். இரு நாடுகளுக்கு இடையிலான உறவு, எந்தெந்த துறைகளில் ஒத்துழைப்பு அளிப்பது, ஈரான் மற்றும் ரஷ்யாவுடன் இந்தியாவுடனான உறவு தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து இந்தியா - அமெரிக்கா ஆகிய இருநாடுகளும் கூட்டாக அறிக்கை வெளியிட்டன. அதில் கூறியிருப்பதாவது, இரு தரப்பு மற்றும் பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட அமைச்சர்கள் உறுதி ஏற்றுள்ளனர்.
இந்தியா அமெரிக்காவின், முக்கிய பாதுகாப்பு கூட்டாளி என்பதை உறுதி செய்த அமைச்சர்கள், பாதுகாப்பு உறவை மேலும் வலுப்படுத்த முடிவு செய்துள்ளனர். மற்ற நாடுகளுக்கு எதிராக தீவிரவாதிகள் தங்களது மண்ணில் செயல்படுவதை பாகிஸ்தான் தடுக்க வேண்டும். மும்பை, பதன்கோட், உரி தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டவர்களை நீதியின் முன்நிறுத்த வேண்டும். இவ்வாறு அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.