வியட்நாமில் அமைச்சர் பாரிக்கர்: 2 நாட்டு உறவு மேம்பாடு குறித்து பேச்சு
டெல்லி: இந்தியா, வியட்நாம் இடையேயான உறவை மேம்படுத்துவது குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் வியட்நாம் பாதுகாப்புத் துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் வியட்நாமில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஹனோய் நகருக்கு சென்ற அவர் வியட்நாமின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜெனரல் கோ சுவான் லிச்சை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில்,
பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு குறித்து பாரிக்கரும், லிச்சும் ஆலோசித்துள்ளனர். மேலும் இந்தியா, வியட்நாம் இடையேயான உறவை வலுப்படுத்துவது குறித்தும் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இரு நாட்டு பாதுகாப்புத் துறை உயர் அதிகாரிகளின் கூட்டத்திலும் பாரிக்கர் கலந்து கொண்டு பேசினார் என்றனர்.
பாரிக்கர் வியட்டல் குரூப் ஆப் இன்டஸ்ட்ரீஸின் ஆய்வுக் கூடங்களையும் பார்வையிட்டுள்ளார். வியட்நாமுக்கு பிரம்மோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை அளிக்கும் திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்தாக தகவல் வெளியானது. இந்நிலையில் தான் பாரிக்கர் வியட்நாம் சென்றுள்ளார்.
ஏவுகணைகள் அளிப்பது குறித்து பாரிக்கர் வியட்நாம் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.