பாகிஸ்தானில் நடைபெறும் காமன்வெல்த் பார்லிமென்ட்ரி கூட்டத்தை புறக்கணிக்க இந்தியா அதிரடி முடிவு
டெல்லி : காஷ்மீரில் நடத்தும் தாக்குதலைக் கண்டித்து, பாகிஸ்தானில் நடைபெற உள்ள காமன்வெல்த் பார்லிமென்ட்ரி கூட்டத்தை புறக்கணிக்க இந்தியா முடிவெடுத்துள்ளதாக மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வரும் செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 8 ம் தேதி வரை 61 வது காமன்வெல்த் பார்லிமென்ட்ரி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க, மக்களவை சபாநாயகர் மற்றும் மாநில சபாநாயகர்களுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்தது. ஆனால், காஷ்மீர் பிரச்னைக்குரிய பகுதி எனக்கூறி, அம்மாநில சபாநாயகருக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுக்கவில்லை.
இதையடுத்து மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனைத்து மாநில சபாநாயகர்களுடன் இதுகுறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர், பாகிஸ்தானில் நடக்கும் காமன்வெல்த் பார்லிமென்ட்ரி கூட்டத்தை புறக்கணிப்பது என ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.
இந்த முடிவு இந்தியாவின் ஒற்றுமையை காட்டுவதாகவும், பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடு என காஷ்மீர் மாநில சட்டமன்ற சபாநாயகர் ரவீந்தர குப்தா கூறியுள்ளார்.
மேலும் காமன்வெல்த் பார்லிமெண்ட்ரி அமைப்பின் கூட்டத்திற்கு அழைப்பு அனுப்பும் விஷயத்தில் காஷ்மீர் புறக்கணிக்கப்பட்டது தொடர்பாக அதன் தலைவர் மற்றும் செயலாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் ஐ.நா.,வில் காஷ்மீர் பிரச்னை எழுப்பியுள்ளதால், அழைப்பு அனுப்பவில்லை என பாகிஸ்தான் கூறியுள்ளது.
இது தவறான நடவடிக்கை என்றும், எனவே பாகிஸ்தானிலிருந்து ஊடுருவிய பயங்கரவாதிகள், பஞ்சாபின் குருதாஸ்பூர் மற்றும் காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் தாக்குதல் நடத்திய சூழ்நிலையில், இந்த மாநாட்டை புறக்கணிப்பது என இந்தியா முடிவு செய்துள்ளது.