2016 பிரிக்ஸ் உச்சி மாநாடு அக்., 15, 16-ல் கோவாவில் நடைபெறும்: சுஷ்மா அறிவிப்பு
டெல்லி: இந்த ஆண்டின் பிரிக்ஸ் நாடுகள் உச்சி மாநாடு அக்டோபர் 15, 16 தேதிகளில் கோவாவில் நடைபெறும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய பிரிக்ஸ் உச்சி மாநாடு இந்த ஆண்டு இந்தியாவில் நடக்க உள்ளது. இந்த மாநாட்டிற்கான லோகோவில் இந்தியாவின் தேசிய மலரான தாமரையில் பிரிக்ஸ் அமைப்பை சேர்ந்த ஐந்து நாடுகளின் கொடிகளும் இடம்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் செவ்வாய்கிழமை வெளியிட்டார். அப்போது கூறும்போது, ''அக்டோபர் மாதம் 15 மற்றும் 16-ம் தேதிகளில் பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறுகிறது.
கோவா தலைநகர் பனாஜியில் நடைபெறும் இந்த மாநாட்டில், பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான ஒருமித்த, ஒருங்கிணைந்த, கூட்டு தீர்வுகள் தொடர்பான புதிய செயல்திட்டம் வடிவமைக்கப்படும். இதற்காக பிரிக்ஸ் நாடுகளைச் சேர்ந்த 50 அரசுத்துறை அதிகாரிகளிடையே கலந்தாலோசனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த உச்சி மாநட்டை கொண்டாடும் வகையில் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிக்ஸ் கால்பந்து போட்டி, பிரிக்ஸ் திரைப்பட திருவிழா, பிரிக்ஸ் ஆரோக்கிய அமைப்பு, பிரிக்ஸ் இளைஞர்கள் அமைப்பு, பிரிக்ஸ் பொருட்காட்சி, பிரிக்ஸ் நட்புறவு கருத்தரங்கம் போன்றவை நாட்டின் முக்கிய பெருநகரங்களில் நடத்தப்படும் எனவும் சுஷ்மா சுவராஜ் குறிப்பிட்டுள்ளார்.