இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத நிலை உருவாக இன்னும் 100 வருஷம் ஆகுமாம்
டெல்லி: இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது கிரை என்ற குழந்தைகள் அமைப்பு.
சைல்ட் ரைட்ஸ் அண்ட் யூ (Child Rights and You), அதாவது சுருக்கமாக கிரை ( CRY) என்ற அமைப்பு குழந்தைத் தொழிலாளர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. அதன் படி, ஆண்டுதோறும் 2.2 என்ற விகிதத்திலேயே குழந்தைத்தொழிலாளர் முறை குறைந்து வருவதாக தெரியவந்துள்ளது.
மேலும், ஒரு கோடிக்கும் அதிகமான குழந்தைகள் இன்னமும் இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்களாக இருப்பதாக இந்த அமைப்புக் கூறுகிறது. இது ஆண்டு தோறும் 2.2 என்ற விகிதத்தில் குறைந்து வருவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
100 ஆண்டுகள் ஆகும்...
இதே விகிதத்தில் குறைந்தால், இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க இன்னும் 100 ஆண்டுகள் தேவைப்படும் என இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
53 சதவீதம் அதிகரிப்பு...
கடந்த 2001 -2011ம் ஆண்டுகளுக்கிடையே நகர்ப்புறத்தில் மட்டும் 53 சதவீத குழந்தைத் தொழிலாளர்கள் அதிகரித்துள்ளதாகவும் இந்த ஆய்வு அதிர்ச்சி தெரிவித்துள்ளது.
கிராமப் புற குழந்தைகள்...
குழந்தைத் தொழிலாளர்களில் சுமார் 80 சதவீதம் பேர் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களில் நான்கில் 3 பேர் விவசாயம், வீட்டு வேலை, வீட்டில் இருந்தே செய்யும் வேலைகள் மற்றும் குடும்பத் தொழிலில் ஈடுபடுவதாக இந்த ஆய்வு கூறுகின்றது.
5 மாநிலங்களில்...
முக்கியமாக இந்தியாவில் பீகார், உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் குழந்தைத் தொழிலாளர்கள் அதிகமாக இருப்பது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த மாநிலங்களில் மட்டும் சுமார் 55 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளார்களாம்.
உத்திரப்பிரதேசத்தில்...
குறிப்பாக உத்திரப்பிரதேசத்தில் ஆண்டுதோறும் 13 சதவீதம் குழந்தைத் தொழிலாளர்கள் அதிகரித்து வருவதாகவும், அங்கு ஐந்தில் ஒரு குழந்தை குழந்தைத் தொழிலாளியாக மாறுவதாகவும் அந்த ஆய்வு அதிர்ச்சி தெரிவித்துள்ளது.