இந்தியப் படைகள் முதலில் தாக்குதலைத் தொடங்காது... பாகிஸ்தானிடம் ராஜ்நாத்சிங் உறுதி
டெல்லி : காஷ்மீர் எல்லையில் இந்திய படைகள் ஒருபோதும் அத்துமீறி முதலில் தாக்குதலை நடத்தாது என்று பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படைத்தலைவர் உமர் பரூக் பர்கியிடம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார்.
ஆனால் ஜம்மு- காஷ்மீர் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதை நிறுத்தவது குறித்து எவ்வித உறுதிமொழியும் அளிக்கமுடியாது என பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படைத்தலைவர் உமர் பரூக் பர்கி கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் பாதுகாப்பு படை அதிகாரிகளின் இரண்டாம் நாள் பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படைத்தலைவர் உமர் பரூக் பர்கி உள்ளிட்ட அதிகாரிகள் சந்தித்து பேசினர்.
அப்போது எல்லையில் இந்திய படைகள் ஒருபோதும் அத்துமீறி தாக்குதலை நடத்தாது என்று ராஜ்நாத் சிங் உறுதியளித்தார்.
ஆனால் தம்மால் அத்தைகைய உறுதிமொழியை தரமுடியாது என்று பாகிஸ்தான் எல்லைபாதுகாப்பு படைத்தலைவர் கூறியுள்ளார். தான் ஒரு குறிப்பிட்ட படைபிரிவின் தளபதி மட்டுமே என்பதால் இந்தியாவின் கருத்தை தங்களின் தலைவரிடம் தெரிவிப்பதாக கூறினார்.
எல்லையில் அமைதியை நிலை நாட்டுவதாக நேற்று கூறிய உமர் பரூக் பர்கி மறுநாளே தனது நிலைபாட்டை மாற்றிக்கொண்டுள்ளது மத்திய அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே இந்தியாவுடன் ஒரு புறம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே மறுபுறம் காஷ்மீரில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.