‘மக்கள் பீதி அடையத் தேவையில்லை’... நிலநடுக்கம் குறித்து ராஜ்நாத் சிங்
டெல்லி: இந்தியாவின் பல பகுதிகளில் உணரப் பட்டுள்ள நிலநடுக்கம் குறித்து மக்கள் பீதிஅடைய தேவையில்லை என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 25ம் தேதி நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 8 ஆயிரத்திற்கும் அதிகமான மகக்ள் உயிரிழந்தனர். இதனால், கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத பேரழிவைச் சந்தித்துள்ளது நேபாளம். இன்னும் அந்த பாதிப்பில் இருந்து மீளமுடியாமல் தவித்து வருகிறது.
இந்நிலையில் இன்று மதியம் நேபாளம், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத்தில் 7.4 ரிக்டர் அளவுகொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
டெல்லி, உத்தரபிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களிலும் உணரப்பட்டது. சென்னையிலும் சில இடங்களில் வீடுகள் அதிர்ந்ததால், மக்கள் அனைவரும் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
இந்நிலையில், நிலநடுக்கம் தொடர்பாக அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் ராஜ்நாத் சிங் பேசியதாவது :-
நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது என்ற செய்தி கிடைத்து உள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இது உணரப்பட்டு உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்களை சேகரித்து வருகிறது.
நிலநடுக்கம் ஏற்பட்டது தொடர்பாக தற்போது தகவல் கிடைத்து உள்ளது. மக்கள் பீதிஅடைய தேவையில்லை. நேபாளத்திற்கு உதவி தேவை என்றால் இந்தியா வழங்கும்' என்றார்.
இதற்கிடையே மத்திய அரசு, தேசிய பேரிடர் மேலாண்மை படையுடன் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.