"உன்னதமான இந்தியாவின் தூதர்" பொறுப்பில் இல்லாவிட்டாலும் இந்தியா வியத்தகு நாடுதான் - ஆமிர்கான்
டெல்லி: உன்னதமான இந்தியாவின் தூதர் பொறுப்பில் இல்லாவிட்டாலும் இந்தியா எப்பொழுதும் வியத்தகு நாடுதான். நாட்டிற்காக சேவை அளித்தது எனக்கு கிடைத்த மரியாதை என்று பாலிவுட் நடிகர் ஆமிர்கான் கூறியுள்ளார்.
இந்திய சுற்றுலாத்துறையை பிரபலப்படுத்தும் நோக்கில் உன்னதமான இந்தியா (incredible india) என்ற பிரச்சார திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் விளம்பர தூதராக பிரபல பாலிவுட் நடிகர் ஆமிர்கான் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் சுற்றுலாத் துறையின் தூதர் பொறுப்பில் இருந்து பாலிவுட் நடிகர் ஆமிர்கானை சுற்றுலாத்துறை அமைச்சகம் நீக்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. ஆனால் அவர் நீக்கப்படவில்லை அப் பொறுப்பில்தான் நீடிக்கிறார் என்று மத்திய சுற்றுலா அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்தது.
ஆனால் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், உன்னதமான இந்தியா திட்டத்திற்காக விளம்பர நிறுவனமான மெக்கேன் எரிக்சன் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டது. எனவே விளம்பர தூதராக செயல்பட்டுவந்த ஆமிர்கான் ஒப்பந்தமும் முடிவுக்கு வந்துவிட்டது என்று விளக்கமளித்தார்.
இதுகுறித்து ஆமிர்கான் கூறுகையில், மக்களின் சேவைக்காக இதுவரை நான் நடித்துள்ள விளம்பர படங்கள் அனைத்தும் எனக்கு சம்பளம் இல்லாமல் எடுக்கப்பட்டது. நாட்டிற்கு சேவை அளிக்கும் வகையில் கடந்த 10 ஆண்டுகளாக உன்னதமான இந்தியாவின் தூதர் பொறுப்பில் சேவை செய்தது எனக்கு கிடைத்த மரியாதை.
திட்டங்களின் பிரச்சாரத்திற்கு விளம்பரத் தூதர் வேண்டுமா வேண்டாமா என்பது பற்றி அரசுதான் முடிவு எடுக்க வேண்டும். அந்த வகையில். என்னை சேவைக்கான பொறுப்பில் இருந்து நீக்கிய அரசின் முடிவினை நான் மதிக்கிறேன். நான் தூதராக இருந்தாலும், இல்லாவிட்டாலும், இந்தியா வியத்தகு நாடு தான் என்று ஆமிர்கான் கூறினார்.