கவலைப்படாதீங்க.. நாங்க இருக்கோம்.. இந்தியாவிலிருந்து சீனாவுக்கு பறக்கிறது மருத்துவ உபகரணங்கள்
Recommended Video
டெல்லி: இந்திய விமானப்படை (ஐஏஎஃப்) விமானத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சீனாவுக்கு மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களின் அவசரகால பொருட்களை நாளை இந்தியா அனுப்பி வைக்க உள்ளதாம்.
உயர்நிலை டிஃபிபிரிலேட்டர்கள், உட்செலுத்தும் குழாய்கள், பலவிதமான முகமூடிகள், கையுறைகள் போன்ற பல்வேறு மருத்துவ சாதனங்களை அரசு அனுப்ப உள்ளது. அறுவை சிகிச்சை தொப்பிகள் மற்றும் முக கவசங்களும் இதில் இருக்கும்.
டிஃபிபிரிலேட்டர்கள் என்பது இதயத் துடிப்பை மீட்டெடுக்கப் பயன்படுத்தப்படும் மருத்துவ சாதனமாகும். மனிதாபிமானம் மற்றும் இரு நாடுகள் நடுவேயான நல்லெண்ண அடிப்படையில், இந்த உபகரணங்களை இந்தியா இலவசமாக வழங்க உள்ளது.
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சம், மருந்துத் துறை, மற்றும் வெளிவிவகார அமைச்சகம் ஆகியவை இணைந்து அனுப்பப்பட வேண்டிய பொருட்களை முடிவு செய்து கொள்முதல் செய்துள்ளன.
"அறுவைசிகிச்சை மற்றும் அறுவைசிகிச்சை அல்லாத முகமூடிகள், ஆய்வு மற்றும் பரிசோதனை கையுறைகள், காலணிகள் மற்றும் தலை கவர்கள், அறுவை சிகிச்சை தொப்பிகள் மற்றும் முக கவசங்கள் உள்ளிட்ட பிற பொருட்களுடன் டிஃபிபிரிலேட்டர்கள் மற்றும் உட்செலுத்துதல் விசையியக்கக் குழாய்கள் உள்ளிட்ட பல்வேறு உயர் மருத்துவ சாதனங்களை நாங்கள் வாங்கி வைத்துள்ளோம்." என்று ஒரு மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஜன் அவுஷதி என்ற பெயரில், குறைந்தவிலையில் மருந்துகளை சப்ளை செய்யும் மெடிக்கல்களை மத்திய அரசு நடத்தி வருகிறது. அங்கிருந்து மாஸ்க்களை அரசு கொள்முதல் செய்துள்ளது. பிற சாதனங்களை, பொதுத்துறை மருந்து நிறுவனமான எச்.எல்.எல் லைஃப் கேர் மற்றும் தனியார் மருத்துவ சாதன உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்கியுள்ளது.
"அவசரகால கொள்முதல் காரணமாக, டெண்டர்கள் பிறப்பிக்கப்படவில்லை. எச்.எல்.எல் லைஃப் கேர் வழங்கிய நெறிமுறைகளின்படி கொள்முதல் ஆணைகள் (பி.ஓ) பிறப்பிக்கப்பட்டன, " என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் குறைந்தது 2000த்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர், 72,436 நோய்த்தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவில் தொடங்கிய வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் இல்லை, இது மிகவும் ஆபத்தான சூழ்நிலை என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் தெரிவித்துள்ளார். குடெரெஸ் செவ்வாயன்று அளித்த பேட்டியில், இந்த அபாயங்கள் மிக அதிகமானவை. அதற்காக உலகளவில் எல்லோரும் தயாராக இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.