இந்தியாவின் முதல் பெண் போர் விமானிகள்.. சாதனை படைக்கும் 3 பெண்கள்
டெல்லி: இந்திய விமானப்படையில் விரைவில் 3 பெண் விமானிகள் போர் வி்மானிகளாக பொறுப்பில் அமர்ந்து சாதனை படைக்கவுள்ளனர்.
ஹைதராபாத்தின் ஏர் போர்ஸ் அகாடமியில் தற்போது பயிற்சியில் இருக்கும் இந்த பெண் விமானிகள், விரைவில் இந்தியாவின் முதல் பெண் போர் விமானிகள் என்கின்ற பெருமையைப் பெறப் போகின்றார்கள்.
இந்த அகடாமியில் கிட்டதட்ட 125 பேர் போர் விமானிக்கான தகுதியைப் பெற்றுள்ளனர். அவர்களில் 45 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த 45 பேரில், மூன்று பெண் விமானிகளும் அடக்கம்.
விமானிகள் அனைவரும் நாளை பயிற்சி முடிந்து வெளியேற உள்ளனர். இதில் தேர்வாகாத வீரர்கள் வருகின்ற ஜூன் 2016 முதல் இரண்டாம் கட்ட பயிற்சியில் ஈடுபடுவார்கள்.
தேர்வாகியுள்ள 45 பேரில், 3 பெண் விமானிகளும் போர் விமான படையில் இணைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களே இந்தியாவின் முதல் பெண் போர் விமானிகள் என்பதால் வரலாறு படைக்கின்றனர்.