மத ஒற்றுமை இருக்கும்வரை இந்தியாவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது: ஒபாமா பேச்சு
டெல்லி: மத அடிப்படையில் பிளவுகள் ஏற்படாதவரை இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க முடியாது என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறினார்.
டெல்லியில் உள்ள சிரிபோர்ட் என்ற ஆடிட்டோரியத்தில், சுமார் 2000 இந்திய மாணவ, மாணவிகள் மத்தியில் அமெரிக்க அதிபர் ஒபாமா இன்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியாவின் சுவாமி விவேகானந்தர் நூறு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில், எந்த சொந்த ஊரான சிக்காகோவுக்கு வந்து அங்குள்ள மக்களை சகோதர, சகோதரிகளே என்று அழைத்தார். இந்து மதத்தையும், யோகா கலையையும் அமெரிக்கர்களுக்கு அவர் கற்றுக்கொடுத்தார்.
நான் இப்போது உங்கள் நாட்டுக்கு வந்து, இந்தியர்களை பார்த்து சகோதர, சகோதரிகளே என்று அழைக்க பெருமைப்படுகிறேன்.
நிலாவுக்கும், செவ்வாய்க்கும் சென்றுள்ள சில நாடுகளின் பட்டியலில் நமது இரு நாடுகளும் உள்ளன. ஐ.நா.வின் நிரந்தர உறுப்பு நாடாக இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும். (இவ்வாறு ஒபாமா கூறியபோது, கூடியிருந்தவர்கள் உற்சாக கைதட்டல் மூலம் வரவேற்றனர்).
உலகின் எந்த ஒரு நாட்டைவிடவும் வேகமாக வறுமையை ஒழித்துள்ளது இந்தியா. அணு ஆயுதங்கள் இல்லாத உலகை உருவாக்குவதே இந்தியா மற்றும் அமெரிக்காவின் நோக்கம். இலங்கை, பர்மா போல அணு ஆயுதங்கள் இல்லாத நாடுகள் உருவாக வேண்டும்.
கார்பன் புகை இல்லாத மின்சார வினியோகத்தை அளிக்க இந்தியாவுக்கு அமெரிக்கா உதவும். இந்தியா-அமெரிக்கா நாடுகள் தீவிரவாதத்தால் அச்சுறுத்தலில் உள்ளன. எனவே, தீவிரவாதத்தை ஒடுக்க இரு நாடுகளும் இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம்.
இந்தியாவில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், சமணர், சீக்கியர், பவுத்தர் என அனைத்து மதத்தவர்களும் தங்களது வழிபாட்டை மேற்கொள்ள சுதந்திரம் உள்ளது. ஒரே மரத்தில் பூத்த பல பூக்கள் போன்றவைதான் எங்கள் நாட்டு மதங்கள் என்று மகாத்மா காந்தி முன்பு கூறியது உண்மைதான்.
உலகத்தின் அமைதி என்பது, மனிதர்களின் இதயங்களில் இருந்தே தொடங்க வேண்டும். அப்போது உலகம் தானாக அமைதியடையும்.
பல இனம், பல மதங்களை கொண்ட நாட்டில் பரஸ்பரம் ஒவ்வொருவரும் கொடுத்துக்கொள்ளும் மரியாதைதான் அந்த நாட்டின் வளர்ச்சிக்கு அவசியம். பல கலாச்சாரங்கள் கொண்ட இந்திய மக்களின் ஒற்றுமை உலகத்திற்கே உதாரணமாக உள்ளது. அமெரிக்காவிலும் கறுப்பர்கள், வெள்ளையர்கள் என பல இனங்கள், மதங்களை பின்பற்றுவோர் வசிக்கிறார்கள்.
வேற்றுமைகள் மத்தியிலும் ஒற்றுமையாக இருப்பதுதான் நமது இரு நாடுகளின் பலமாகும். மக்களிடையே உள்ள இந்த ஒற்றுமையை கட்டிக்காப்பாற்ற வேண்டியது அவசியம். மத அடிப்படையில் பிளவுகள் ஏற்படாதவை இந்தியாவின் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது.
பதவி காலத்தில் இருமுறை இந்தியா வந்த முதல் அமெரிக்க அதிபர் நான்தான். இந்த சாதனையை நிகழ்த்திய கடைசி அதிபர் நானாக இருக்கமாட்டேன் என்று நம்புகிறேன். அமெரிக்காவுக்கு வந்து கல்வி பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையைவிட, இந்தியா வந்து கல்வி பயிலும் அமெரிக்கர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
இந்தியா அளித்துள்ள, வாக்குறுதிகளை நான் நம்புகிறேன். இந்தியாவுடன் நட்பாக இருக்க பெருமைப்படுகிறேன். ஜெய்ஹிந்த். இவ்வாறு கூறி உரையை நிறைவு செய்தார் ஒபாமா.
ஒபாமா பேச்சை முடித்ததும், லகான் திரைப்படத்தில் இடம்பிடித்த, மித்வா என்ற பாடல் அரங்கத்தில் ஒலிபரப்பப்பட்டு, அந்த இடத்தையே மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கச் செய்தது.
சமையல்காரரின் பேரனாக இருந்து அதிபரானவன்
ஒபாமா மேலும் பேசுகையில், "அமெரிக்கா எனக்கு நிறைய கொடைகள் வழங்கியிருந்தாலும், என் வாழ்வில் நிற பேதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். இழிவாக கருதப்படும் தொழிலை செய்பவர்கள் காணும் கனவுகூட மேன்மையானதே. அதிர்ஷ்டவசமாக நாம் கனவு காண சுதந்திரம் உள்ள நாடுகளில் பிறந்திருக்கிறோம். அமெரிக்காவில் சமையல்காரரின் பேரன் ஒருவன் அதிபராக முடியும் என்பதற்கு நானே உதாரணம். இந்தியாவில் டீ விற்றவர் பிரதமராகி இருக்கிறார்'' என்றார்.