பாகிஸ்தானுக்கு வர்த்தக அந்தஸ்து ரத்து.. இந்தியாவின் முதல் பதிலடி
டெல்லி: பாகிஸ்தானுக்கான சிறப்பு அந்தஸ்தான 'மிகவும் ஃபேவரைட் நாடு' என்பது இந்திவால் ரத்து செய்யப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.
பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. பிறகு நிருபர்களிடம் ஜெட்லி பேசியதாவது:
காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் பற்றி ஆலோசித்தோம். வெளியுறவு அமைச்சகம் மூலமாக, பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் பணிகளை துவங்கியுள்ளோம்.
வணிகரீதியாக பாகிஸ்தான் தற்போது மிகவும் ஃபேவரைட் நாடு என்ற அந்தஸ்தில் உள்ளது. இந்தியா இந்த அந்தஸ்த்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கும், வணிக அமைச்சகத்திற்கும், இந்த தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். இவ்வாறு அருண் ஜெட்லி தெரிவித்தார்.
மிகவும் ஃபேவரைட் நாடு என்ற அந்தஸ்து, பாகிஸ்தானுக்கு, இந்தியாவால் 1996ம் ஆண்டு வழங்கப்பட்டது. இந்த அந்தஸ்து வழங்கப்பட்டால், அந்த நாடுகளில் இருந்து எளிதாக இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய முடியும். பிற நாடுகளை ஒப்பிட்டால் இந்த அந்தஸ்து கொண்ட நாட்டு பொருட்கள் மீது வரி குறைவாக விதிக்கப்படும்.
இந்த அந்தஸ்த்தை ரத்து செய்ய வேண்டும் என தீவிரவாத தாக்குதல்கள் நடக்கும் காலங்களில் எல்லாம், மத்திய அரசுக்கு கோரிக்கைவிடுக்கப்படுவது வழக்கம். ஆனால், இம்முறை மத்திய அரசு, இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.