ஒலிம்பிக்கில் பங்கேற்க 35 வருடங்களுக்கு பிறகு தகுதி பெற்றது இந்திய மகளிர் ஹாக்கி அணி!
டெல்லி: வரும் 2016 ஆம் ஆண்டு நடைபெறும் ரியோ ஒலிம்பிக் போட்டியில், கலந்து கொள்ள இந்திய மகளிர் ஹாக்கி அணி தகுதி பெற்றுள்ளது.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க இந்திய மகளிர் ஹாக்கி அணி தகுதி பெற வேண்டும் என்றால், ஏற்கனவே தகுதி பெற்ற இரு அணிகள் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற வேண்டும்.
அதன்படி, லண்டனில் நடைபெற்று வரும் ஐரோப்பிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்பெயின் அணியை இங்கிலாந்து அணி வீழ்த்தியதையடுத்து இந்திய மகளிர் ஹாக்கி அணி ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்திய மகளிர் ஹாக்கி அணி இதற்கு முன் கடந்த 1980 ஆம் ஆண்டுதான் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது. அதில் 4 வது இடத்தை இந்திய மகளிர் ஹாக்கி அணி பிடித்திருந்தது. 35 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இந்த வாய்ப்பு இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு கிடைத்துள்ளது.