மீனவர் கொலை- இத்தாலிய மாலுமி சிகிச்சைக்காக செல்வதை மத்திய அரசு எதிர்க்காது: சுஷ்மா ஸ்வராஜ்
டெல்லி: பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட இத்தாலிய கடற்படை வீரர் மாஸிமிலியானோ லடோரை, அவரது நாட்டுக்கு சிகிச்சைக்காக திரும்பிச் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதித்தால், மனிதாபிமான அடிப்படையில் அதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்காது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்களை கொலை செய்தது தொடர்பான வழக்கைச் சந்தித்து வரும் இத்தாலி கப்பலின் பாதுகாப்புப்படை வீரர்களில் ஒருவரான மாஸிமிலியானோ லடோர் தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர்.எஃப்.நாரிமன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இத்தாலி கப்பல் பாதுகாப்புப் படை வீரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் சோலி சொராப்ஜி, கே.டி.எஸ்.துளசி ஆகியோர் ஆஜராகி, "மாஸிமிலியானோ லடோருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. அவர் பூரண குணமடைய, உடனடியாக இத்தாலிக்குத் திரும்ப வேண்டியுள்ளது. அதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும். இந்தியாவுக்கான இத்தாலி நாட்டுத் தூதர் டேனியல் மேன்சினி, வேண்டுமென்றால் மாஸிமியானோவுக்கு உத்தரவாதம் அளிக்க தயாராக உள்ளார்' என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து மாஸிமிலியானோவை அவரது சொந்த நாட்டுக்கு 2 மாதங்களுக்கு அனுப்புவது குறித்து மத்திய அரசு தனது நிலைப்பாட்டை, வரும் 12ஆம் தேதிக்குள் தெளிவுபடுத்த வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
மேலும் ஜாமீனில் உள்ள மாஸிமிலியானோ, தில்லியில் சாணக்கியபுரி காவல் நிலையத்தில் வாரம் ஒரு முறை ஆஜராகி கையெழுத்திடுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தனக்கு உடல்நலன் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், எனவே சிகிச்சைக்காக சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கூறி, இத்தாலிய கடற்படை வீரர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மனிதாபிமான அடிப்படையில், இந்த மனுவுக்கு அரசு எதிர்ப்பு தெரிவிக்காது என்றார்.