மல்லையாவை திருப்பி அனுப்ப வேண்டும்... இங்கிலாந்து அரசுக்கு இந்தியா கடிதம்
டெல்லி: வங்கிக் கடன் மோசடி வழக்கில் சிக்கி, இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ள பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா மீது, இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதனை திரும்ப செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, கடன் வழங்கிய வங்கிகள் இணைந்து, உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தன. அதில், விஜய் மல்லையா வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக அவரது பாஸ்போர்ட்டை பறிக்க வேண்டுமென்று கூறப்பட்டிருந்தது.
பிடிவாரண்ட்...
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்தபோது, கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பிச் சென்று விட்டார் என சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விஜய் மல்லையாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும், விஜய் மல்லையா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
லண்டனில் ராஜவாழ்க்கை...
இதற்கிடையே, இந்தியாவில் இருந்து தப்பிச் சென்ற மல்லையா, தற்போது இங்கிலாந்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. பதுக்கப்பட்டிருந்த பணத்தில் இருந்து அங்கே அவர் சொத்துக்கள் வாங்கி, அதில் தங்கி ராஜவாழ்க்கை வாழ்வதாகவும் செய்திகள் வெளியாகின.
பாஸ்போர்ட் முடக்கம்...
இதைத் தொடர்ந்து, விஜய் மல்லையாவின் பாஸ்போட்டை முடக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு, அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையை ஏற்று விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை மத்திய அரசு தற்போது முடக்கியது. மேலும், அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
கடிதம்...
அதன் ஒருகட்டமாக விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என இங்கிலாந்து அரசுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில், ‘லண்டனில் இருந்து விஜய் மல்லையாவை இந்தியா அனுப்ப வேண்டும். வங்கிகளிடம் கடன் பெற்று திருப்பி செலுத்தாதது தொடர்பான வழக்குகள் விஜய் மல்லையா மீது தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைகளுக்காக, அவர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படவேண்டும்' என இந்தியா வலியுறுத்தியுள்ளது.
எதிர்பார்ப்பு...
தற்போது இங்கிலாந்தில் உள்ள மல்லையா, அந்நாட்டு குடிமகனாவே மாறி, வாக்காளர் பட்டியலிலும் அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்த சூழ்நிலையில், இந்தியாவின் இந்தக் கடிதத்திற்கு இங்கிலாந்தின் பதில் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.