அருணாச்சலில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது... 6 பேர் பலி!
தவாங்: அருணாச்சல பிரதேசத்தில் விமான படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 6 பேர் உயிரிழந்தனர்.
இந்திய விமானப்படையின் எம் ஐ 17 வி 5 ரக ஹெலிகாப்டர் இன்று அதிகாலையில் அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங்க் பகுதியில் விபத்துக்குள்ளானது. அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இந்திய சீன எல்லையை ஒட்டி 12 கிலோமீட்டர் தொலைவில் ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்த போது திடீரென விழுந்து நொறுங்கியுள்ளது.
ஹெலிகாப்டர் பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்ட போது தவாங் செக்டாரில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஹெலிகாப்டரில் சென்ற விமானப்படை அதிகாரிகள் 2 பேர் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட இந்த ஹெலிகாப்டர் பேரிடர் நிவாரணப் பணிகளின் போது குறிப்பாக வெள்ளத்தின் போது பயன்படுத்தப்படுகிறது. அண்மையில் குஜராத், ராஜஸ்தான் மாநில வெள்ள நிவாரணப் பணிகளிலும் இந்த ஹெலிகாப்டர் ஈடுபட்டது.