கராச்சி தாக்குதலை தொடர்ந்து சென்னை உட்பட விமான நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பு
பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் 10 தீவிரவாதிகள் உட்பட 23பேர் கொல்லப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தீவிரவாதிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு பதிலடியாக இத்தாக்குதலை நடத்தியதாக தாலிபான் தெரிவித்துள்ளது.
இதையடுத்து இந்தியாவிலும் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களின் சர்வதேச விமான நிலையங்கள் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
பயணிகள் கடுமையான சோதனைகளுக்கு பிறகே விமான நிலையங்களுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். நாட்டின் உளவுத்துறை அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். இன்று மாலை நடைபெறும் இக்கூட்டத்தில் இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பை அதிகரிப்பது குறித்தும், கராச்சி தாக்குதலின் பின்விளைவுகள் குறித்தும் ஆலோசிக்கப்படும்.