ராணுவத்தின் தொடரும் அதிரடி வேட்டை... அன்று மியான்மர்... இன்று பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர்!
டெல்லி: இந்திய ராணுவத்தினரை தாக்கிவிட்டு மியான்மரில் பதுங்கியிருந்தாலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தலைமறைவாக இருந்தாலும் எல்லை தாண்டி வேட்டையாடப்படுவது தீவிரவாத இயக்கங்களை பீதிக்குள்ளாக்கி இருக்கிறது.
வடகிழக்கு மாநிலங்களில் தனிநாடு கோரும் ஆயுத குழுக்கள் உள்ளன. இந்த ஆயுதக் குழுவினர் கூட்டாக இணைந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் மணிப்பூரில் இந்திய ராணுவத்தினர் மீது கொடூர தாக்குதலை நடத்தினர்.
இந்த தாக்குதலில் மொத்தம் 18 ராணுவ வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர். இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தி விட்டு அண்டை நாடான மியான்மரில் உள்ள முகாம்களுக்குள் போய் இந்த தீவிரவாதிகள் பதுங்கிக் கொண்டனர்.
மியான்மருக்குள் நுழைந்து தாக்குதல்..
இந்திய ராணுவம் அண்டை நாட்டுக்குள் நுழைந்து தாக்குதலை நடத்தும் என்று தீவிரவாதிகள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் நமது ராணுவம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சில நாட்களிலேயே மியான்மருக்குள் இரவோடு இரவாக நுழைந்து 50க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை அதிரடியாக வேட்டையாது ராணுவம்.
யூரியில் பாக். தீவிரவாதிகள்...
தற்போது யூரி பகுதியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து எல்லை தாண்டி ஊடுருவிய தீவிரவாதிகள் இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 18 ராணுவ வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர்.
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள்...
இந்த கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக இம்முறை எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைந்து ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இத்தாக்குதலில் 20 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் படுகாயமடைந்துள்ளனர்.
பீதியில் பயங்கரவாதிகள்
மொத்தம் 3 தீவிரவாத முகாம்கள் இத்தாக்குதல்களில் அடியோடு அழிக்கப்பட்டிருப்பது உறுதியாகி உள்ளது. ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினால் எல்லை தாண்டி பதிலடி தரும் இந்தியாவின் அதிரடியால் தீவிரவாதி இயக்கங்கள் பீதியில் உறைந்து போயுள்ளன.