எல்லைப் பகுதியில் 2,500 வீரர்கள் குவிப்பு.. சீனாவுக்கு எதிராக இந்தியா அதிரடி
இந்திய சீன எல்லையில், பாதுகாப்பைப் பலப்படுத்தும் நோக்கில் இந்திய ராணுவம் மேலும் 2,500 வீரர்களைக் குவித்துள்ளது.
காங்டாக்: சீனாவை ஒட்டியுள்ள எல்லையில் இந்தியா ராணுவம் கண்காணிப்பை வலுப்படுத்தியுள்ளது. சிக்கிம் எல்லையில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ள பகுதியில் மேலும் 2,500 வீரர்களை இந்தியா குவித்துள்ளது.இதனால் அங்கு எழுந்த போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
பூடானுக்கு சொந்தமான டோக்லாம் பீடபூமியை ஆக்ரமித்துள்ள சீனா, சிக்கிம் மாநிலத்தை ஒட்டியுள்ள பகுதிகளிலும் சர்ச்சையில் ஈடுப்பட்டுள்ளது. அங்கு சாலை அமைக்கும் பணியை சீன வீரர்கள் செய்ய தொடங்கினர். இதில்தான் பிரச்சனை முற்றியது.
இதையடுத்து ஏற்பட்டுள்ள மோதல் போக்கு கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், இந்திய சீன எல்லையில் இரு தரப்பும் படை வீரர்களை போட்டிப் போட்டுக் குவித்து வருகிறது.
சிக்கிமிற்கும் பூடானுக்கும் இடையே சீனாவுக்கு சொந்தமான சும்பி பள்ளத்தாக்கை ஒட்டிய பகுதியில் அந்நாடு மேலும் படைவீரர்களை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. இதன் காரணமாக சிக்கிம் எல்லையில் 2,500 வீரர்களை இந்தியா நிறுத்தியுள்ளது.
இதே போல் ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் முதல் அருணாசல பிரதேசம் வரை சீனாவை ஒட்டி 4,057 கிலோ மீட்டர் நீளத்துக்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எந்த நேரமும் போர் தொடங்கலாம் என்ற நிலை நீடிக்கிறது.
ஆனால் இன்று, இந்திய சீன எல்லைப் பிரச்சனை என்பது தாற்காலிகமானதுதான், இந்த விஷயத்தில் இந்திய தனியார் தொலைக்காட்சிகள் கூறுவதை யாரும் நம்ப வேண்டாம் என்று சீன வெளியுறவு அதிகாரி ஒருவர் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.